0
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட.
இவர் ஈழ யுத்த காலப்பகுதியில், அதாவது 2005 – 2009ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், நீதிக்குப் புறம்பான கொலைகள் உட்பட மனித உரிமை மீறல்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனால் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட நால்வருக்கு கடந்த மார்ச் 24ஆம் திகதி இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்தது.
இந்நிலையில், ‘The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism’ என்ற தலைப்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட எழுதிய அவரது சுயசரிதைப் புத்தகம், இலத்திரனியல் சந்தையான Amazonஇல் விற்பனைக்கு விடப்பட்டது.
எனினும், ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை விற்பனையில் இருந்து நீக்குமாறு இங்கிலாந்து Amazon கிளைக்கு, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது இந்தப் புத்தகத்தை விற்பனையில் இருந்து நீக்க Amazon நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், Amazon இன் இங்கிலாந்து கிளை இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகவும் பதிலளித்துள்ளது.
கரன்னாகொடவின் மேற்படி புத்தக விற்பனை, இங்கிலாந்து தடைச் சட்டங்களை மீறும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கத்தால் தடைகளுக்கு உட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது ஒரு குற்றவியல் குற்றமாகும் என்பதுடன், மேலும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.