• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

வடக்கில் கடத்தல்கள், கொலைகளைச் செய்தவர்கள் விரைவில் கைது! – அமைச்சர் தகவல்

Byadmin

Apr 19, 2025


“வடக்கிலும் மண் கடத்தல்காரர்கள் உள்ளார்கள். ஆட்களைக் கடத்தியவர்கள் உள்ளார்கள். ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

– இவ்வாறு கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலை என்று மாறுவது உறுதியாகும்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பி எண்ணி வருகின்றார்கள்.

அதேபோல் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயற்படும்.

நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாகக் கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நாம் கையில் எடுக்கமாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணி இடம்பெறும்.

மக்களின் நிம்மதியைச் சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகர் ரௌடி எனவும் கூறத் தொடங்கியுள்ளனர். என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி. மக்களுக்காகச்  செயற்படுகின்றபோது, மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றபோது, மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கின்றபோது அதைப் பார்த்து ரௌடித்தனம் என்கின்றனர்.

இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களைத் தூக்கித்  திரிந்தவர்கள்தான் இப்படிச் சொல்கின்றனர்.

புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டபோது அதனை வரவேற்றவர்கள், இன்றைக்கு தாங்கள்தான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள்.” – என்றார்.

By admin