0
வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசு இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழி குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், திருகேஸ்வரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் ‘கார்பன் டேட்டிங்’ சோதனைகளுக்காகப் ‘புளோரிடா’வுக்கு அனுப்பப்படவுள்ளன என்றும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் வடக்கு மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணை தொடர்பாக வாய்மொழி மூல விடைக்கான வினாக்களைச் சிவஞானம் சிறீதரன் எம்.பி. முன்வைத்தார். அதற்குப் பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.