0
வடக்கு இலண்டனில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்ஃபீல்டில் உள்ள மேபரி க்ளோஸ் (Maybury Close) என்ற இடத்தில் உள்ள அக் குடியிருப்பு கட்டிடத்தின் கூரை மற்றும் இரண்டாவது மாடியின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகின.
இந்தத் தீயை அணைக்கும் பணியில் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். வடக்கு இலண்டன் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் (Hertfordshire) ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து அதிகாலை 05:19 மணிக்கு முதல் அழைப்பு கிடைத்ததாக இலண்டன் தீயணைப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே 14 பேர் கட்டிடத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் புகை சுவாசம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குடியிருப்புகளுக்கு அருகில் வசிக்கும் விக்கி கார்ட்னர் என்பவர் அளித்த தகவலின்படி, அவர் அதிகாலை 5:15 மணியளவில் தனது நாய்களை அழைத்துச் செல்ல வீட்டை விட்டு வெளியேறியபோது, தெருவின் முடிவில் உள்ள குடியிருப்பில் இருந்து தீப்பிழம்புகள் வருவதை அவதானித்தார்.
ஓர் அயலவர், அங்குள்ள குடியிருப்பாளர்களை எச்சரிக்க கதவுகளைத் தட்டியதாகவும், அதன் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தால் குடியிருப்பாளர்கள் “எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள்” என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.
அதேவேளை, இந்த விபத்து நடந்த அதே அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று தவறான தீ எச்சரிக்கை குறித்த தீயணைப்புப் படை மற்றும் பொலிஸார் பதிலளித்ததாகவும் திருமதி கார்ட்னர் மேலும் தெரிவித்தார்.