0
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறியதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாகாண மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430/25 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக்கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது காணி அமைச்சர் லால்காந்தவினால் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது இவ்விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில், அதுகுறித்த விசாரணைகள் முடிவடைந்து இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் வரை வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட 2430ஃ25 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சுமந்திரன், அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
வடக்கில் 5940 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணயச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி சட்டமறுப்புப்போராட்டத்தை நடாத்துவது குறித்து நாம் வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் இருக்கையில், அதனை மீளப்பெறப்போவதாகக் கடந்த மாதம் 27 ஆம் திகதி அரசு அறிவித்தது. அவ்வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்த்தோம்.
ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் இவ்வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படாததன் காரணமாக, அதுகுறித்து கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்தேன். கடந்த செவ்வாயன்று இவ்வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்டமா அதிபர் இன்று வரை (நேற்று) கால அவகாசம் கோரியிருந்தார்.
அதனையடுத்து வெள்ளிக்கிழமை (20) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் கால அவகாசம் கோரியிருக்கிறார். இது மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் அவகாசத்தை மாத்திரமே கொண்டிருக்கிறது. அவ்வாறெனில், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறியதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.