ஏனைய கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்களைக் கருத்தில் கொண்டால் நாங்கள் ஒரு தும்புத்தடியை நிறுத்தலாம் என நினைக்கிறோம் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப்பெறப்பட்டமைப் பாரிய வெற்றியாகும். இந்த விடயத்தை நாடாளுமன்றம் கொண்டு சென்று அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சி.சிறீதரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கும், வைத்தியர் அர்ச்சுனாக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் பிரதமருடனான சந்திப்பில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர் மற்றும் அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
காணி சுவீகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதை தமிழ், முஸ்லிம் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.” – என்றார்.
இதன்போது, ‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நிறுத்தப்படுவார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன? – என்று கஜேந்திரகுமார் எம்.பியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
“மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம். ஏனைய கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்களைக் கருத்தில்கொண்டால் நாங்கள் ஒரு தும்புத்தடியை நிறுத்தலாம் என நினைக்கின்றோம்.” – என்றார்.
The post வடக்கு முதலமைச்சர் தெரிவு: சுமந்திரனுக்கு எதிராகத் தும்புத்தடியை நிறுத்த எண்ணுகின்றார் கஜேந்திரகுமார்! appeared first on Vanakkam London.