• Sun. Sep 14th, 2025

24×7 Live News

Apdin News

வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம் | மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்

Byadmin

Sep 14, 2025


யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் முகம் கொடுத்து வந்த நிலையில் கடந்த மாரி காலத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அத்துடன் இவ்வாறான சட்டவிரோத மணில் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காண்ப்படுகிறது.

எனவே கற்ககோவளம்- புனிதநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் கடத்தலில் இந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிலரே ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இனிமேல் இவ்வாறான சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடவேண்டாம் என அப்பகுதியை சேர்ந்த சிலர் கோரியுள்ளனர்.

அதனை அடுத்து, அவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களை வரும் வழியிலேயே வழிமறித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், இரவு மீன்பிடி வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் வாள்களுடன் வந்து மேற்கொண்ட இத்தாக்குதலில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

By admin