• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்த மூவர் பற்றிய விவரங்கள் வெளியீடு!

Byadmin

Jul 7, 2026


கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணியிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மூவர் மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இயந்திர இயக்குநரான சந்திரபான், பீகாரை சேர்ந்த சிவில் ஃபோர்மேன் விகாஷ் குமார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அன்மோல் என அடையாளம் காணப்பட்டனர். கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவை தொடர்ந்து, இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்தார்.

அமைச்சர் அறிக்கை:

வய்திரி தாலுகா மருத்துவமனையில் உடற்கூறாய்வு பணிகள் நிறைவடைந்தன. இப்பணியை விரைவுபடுத்த, பத்தேரி தாலுகா மருத்துவமனையில் இருந்து ஒரு காவல் துறை மருத்துவர் வய்திரிக்கு வரவழைக்கப்பட்டதாக திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.

மீட்புப் பணிகளின் ஒரு பகுதியாக சுகாதார துறையினரும், 108 ஆம்புலன்ஸ் சேவையும் களத்தில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்த ஒன்பது பேர் மெப்பாடி WIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; அவர்களில் இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற ஏழு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் எர்ணாகுளத்தை சேர்ந்த பொறியாளரும் (site engineer) அடங்குவார்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இவரே மலையாளி ஆவார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் தீவிரமானவை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை:

காயமடைந்தவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ஒருவருக்கு தலை மற்றும் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, மற்றொருவருக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ சேவைகளை ஒருங்கிணைக்க மெப்பாடி சமூக சுகாதார நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் வசிக்கும் 42 குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 142 பேர் மெப்பாடி பாலிடெக்னிக்கில் உள்ள நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஆய்வு:

முகாமில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நிறுத்தப்பட்ட பின்னரும், இரவு முழுவதும் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு அந்த இடத்திலேயே தயார் நிலையில் இருக்கும் என்று முரளீதரன் கூறினார்.

சுகாதார துறையின் சேவைகள் 24 மணி நேரமும் தொடரும் என்றும், வயநாடு மருத்துவ அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முதல்வர் வி.டி. சதீசன் நாளை (புதன்கிழமை) மதியம் அந்த இடத்தை பார்வையிடுவார் என்று முதலமைச்சரின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

By admin