1
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
26 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன தலா 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகியன தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.
இன்றைய தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் பதவிக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன் ஜெயந்தன் 15 வாக்குகளையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமார் 7 வாக்குகளையும் பெற்றனர்.
உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கந்தையா இலங்கேஸ்வரன் தெரிவானார்.