• Mon. May 11th, 2026

24×7 Live News

Apdin News

“வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும்” | சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்!

Byadmin

May 11, 2026


வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் விஜய் ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்நாட்டின் புதிய முதல் அமைச்சருக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பாக முழுமையான வாழ்த்துக்களை கூறுகின்றோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அவர் கடினமாக உழைப்பார் என்று நம்புகின்றோம். அவர் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஒருவர்.

இந்தியாவில் தமிழகம் பல விடயங்களில் வளர்ச்சியடைந்த ஒரு மாநிலமாக உள்ளது. அது அடுத்த கட்டம் நோக்கி செல்வதை ஈழத்தமிழர்கள் முக்கியமாக கருதுகின்றோம். தமிழகம் முன்னேறினால் அது ஈழத்தமிழர்களுக்கு நிறைய வாய்ப்புகளை உண்டாக்கும்.

ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை முழுமையாக புரிந்து கொண்டு இரண்டு தரப்பும் கைகோர்த்து செயற்படுமாக இருந்தால் நிச்சயமாக உலகத்தில் தமிழ் மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

விஜய் முதன்முறையாக வந்திருந்தாலும் கூட பெருமளவு மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். எனவே வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் அவர் ஒத்துழைப்பார். ஒத்துழைக்க வேண்டும்.

கச்சதீவு விடயம் தொடர்பாக பேச வேண்டியது டில்லியும் கொழும்பும். கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. மீனவர் பிரச்சனையும் அதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

மீனவர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் பட்சத்தில் கச்சதீவு விடயம் காணாமல் போய்விடலாம். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அங்கும் இருக்கிறார்கள் இங்கும் இருக்கிறார்கள். எனவே உறுதியான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்களில் புதிய முதல் அமைச்சர் இந்திய மத்திய அரசுடன் பேசி காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பு.

அத்துடன் இலங்கை அரசு புதிய அரசியல் யாப்பை கொண்டுவரும் பட்சத்தில் அதில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக எவ்வாறான விடயங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை தமிழ் தரப்பில் இருந்து ஒருமித்த குரலில் சொல்வதற்காக சட்டத்தரணிகள் பேரவையானது தமிழ் கட்சிகளை இணைத்து ஒரு குழுவை நியமித்துள்ளது.

இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கலந்து கொண்டிருந்தது. ஆனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் கலந்து கொள்கின்ற இடத்தில் தங்களால் கலந்து கொள்ள முடியாது என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அது தவறான ஒரு விளக்கம். அங்கு இல்லாவிடிலும் அந்த கட்சியினர் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களை வைத்துள்ளனர். கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். எனவே அது ஒரு பிரச்சனைக்கு உரிய விடயமல்ல.

இது கட்சி சார்பான விடயமும் அல்ல. அது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டுகின்றமை தொடர்பானது. எனவே ஒரே விதமாக ஒருமித்த கருத்தை தமிழர் தரப்பு முன்வைக்க வேண்டும். எமது கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து உள்ளது. தமிழீழத்திற்காக போராடியவர்களே ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம்.

எனவே உச்சபட்சமான ஒரு சமஸ்டி அமைப்பு முறை என்பது தமிழ் மக்களின் இன பிரச்சனையை தீர்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனவே நாடு பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும், அமைதி இருக்க வேண்டும் முதலீடுகளை இங்கு கொண்டு வரவேண்டுமாக இருந்தால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு சமஷ்டி அரசியலமைப்பு அடிப்படையிலான தீர்வுக்கு அவர்கள் செல்ல வேண்டும் என்றார்.

By admin