எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாங் சி என்ற முன்னாள் சீன வீரரின் கதையை பிபிசி உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா போர் முடிந்த பிறகு, இந்தியாவில் சிக்கிக்கொண்டார் வாங் சி.
அவர் குறித்த செய்தி வெளியான பிறகு, தனது மகனுடன் சீனாவுக்குச் சென்ற வாங் சி, 55 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தினரைச் சந்தித்தார்.
வாழ்க்கை சற்று நன்றாக மாறியது போலத் தோன்றியது.
இந்தியாவில் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் கழித்த வாங் சிக்கு தற்போது 85 வயதாகிறது. இந்நிலையில் விசா பிரச்னையால், இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது அரசாங்கம்.
விசா பிரச்னையில் சிக்கி, இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சத்தில் இருக்கும் வாங் சி மற்றும் அவரது குடும்பத்தினரை பிபிசி குழு சந்தித்தது.
“இப்போது நானும் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவேனா?” என்று கேள்வி எழுப்புகிறார் வாங் சி.
85 வயதான வாங் சி, மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள திரோடி கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.
திரோடி கிராமத்தில் உள்ள தனது வீட்டின் வராண்டாவில் மாமரத்தின் கீழ் அமர்ந்தபடி, நடுங்கும் குரலோடும், சோர்வான கண்களுடனும் காணப்பட்டார் வாங் சி.
“நான் 60 வருடங்களாக இந்தியாவில் வாழ்கிறேன். இப்போதும் நான் இங்கிருந்து துரத்தப்படுவேனா? நான் சீனாவில் இல்லை. என் வாழ்க்கையின் பெரும்பகுதியான 60 ஆண்டுகளை இந்தியாவில் கழித்திருக்கிறேன். என் குழந்தைகளும் குடும்பத்தினரும் இங்கே தான் உள்ளனர். எனக்கு இந்தியாவில் வாழும் உரிமை இல்லையா?” என்று கேட்கிறார்.
அவரது முகத்தில் படர்ந்திருந்த கவலையைத் தெளிவாக உணரமுடிகிறது.
அவரது மகன் விஷ்ணு வாங் கூறுகையில், “மே 6 அன்று, அப்பாவின் விசா காலாவதியாகிவிட்டதாக எங்களுக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. இப்போது விசாவைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது அப்பா இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.”என்கிறார்.
வாங் சி குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் மோசமாக உள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விஷ்ணு, “ரூ. 10-15 ஆயிரம் சம்பளத்தில் என் தந்தையின் மருந்துகள், குழந்தைகளின் படிப்பு மற்றும் சட்ட செலவுகளை நிர்வகிப்பது மிகவும் கடினம்” என்று கூறுகிறார்.
“விசா புதுப்பிக்கப்படாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்று பாலகாட் காவல் கண்காணிப்பாளர் நாகேந்திர சிங் குறிப்பிட்டார்.
விசா தவிர, வாங் சியின் குடும்பம் மற்ற நிர்வாக சவால்களையும் எதிர்கொள்கிறது.
தனது குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது என்று தெரிவித்தார் அவரது மகன் விஷ்ணு வாங்.
“எங்கள் சாதிச் சான்றிதழில், உங்கள் தந்தை எந்த இடத்தைச் சேர்ந்தவர், அவரது சாதி என்ன என்று கேட்கிறார்கள்? என் தந்தை சீனக் குடிமகன் என்று நாங்கள் சொன்னபோது, எங்கள் தந்தையின் சாதியை சீனாவிலிருந்து எழுதிப் பெற்றுவரச் சொன்னார்கள். இப்போது சீனாவிலிருந்து எப்படி எழுதிப் பெறுவது?” என்று கேட்கிறார் விஷ்ணு.
இதுகுறித்து அந்த மாவட்ட அதிகாரிகளிடம் பேசியபோது, ”சட்டத் தடைகளின் காரணமாக, சாதிச் சான்றிதழ் பெற முடியாது, ஆனால் குடும்பத்திற்குத் தேவையான பிற உதவிகள் வழங்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.
கடந்த அறுபது ஆண்டுகளாக, வாங் சி இந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார், ஆனால் அவரது வாழ்க்கை ஒருபோதும் முழுமையாக நிலையான ஒன்றாக மாறவில்லை.
சீன வீரராக இருந்து, திரோடி கிராமத்தின் ‘ராஜ் பகதூர்’ ஆக மாறிய அவரது பயணம், போராட்டங்கள் நிறைந்தது.
சீன வீரர் வாங் சி எப்படி இந்தியா வந்தடைந்தார்?
1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனப் போரின் போது, தான் வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறுகிறார் வாங் சி.
செஞ்சிலுவைச் சங்க வாகனத்தின் உதவியை நாடியதாகவும், ஆனால் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வாங் சி தெரிவித்தார்.
அவரைப் பொருத்தவரை, அவர் ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
1969 ஆம் ஆண்டு, அவரை சிறையில் இருந்து விடுவித்த சண்டிகர் உயர் நீதிமன்றம், அவர் சீனாவுக்குத் திரும்ப அனுமதிக்கவில்லை.
இதன் பிறகு, அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திரோடி கிராமத்திற்கு அனுப்பப்பட்டார்.
“சில நேரங்களில், ஒரு தவறு என் வாழ்கையை முற்றிலும் மாற்றிவிட்டது என்று தோன்றுகிறது” வீட்டின் வெளியே பார்த்தபடி வாங் சி கூறுகிறார்.
“முதலில் நான் டெல்லி சிறையில் இருந்தேன். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் அங்கே வைக்கப்பட்ட பிறகு, என்னை ராஜஸ்தான் சிறைக்குப் அனுப்பினார்கள். அங்கிருந்து மீண்டும் மாற்றி பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டேன்” என்று வாங் சி நினைவுகூர்கிறார்.
வாங் சியின் கூற்றுப்படி, 1969 ஆம் ஆண்டு சண்டிகர் நீதிமன்றத்தால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால் சீனாவுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால், அவர் சண்டிகரில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள போபாலுக்கும், பின்னர் அங்கிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் உள்ள திரோடி கிராமத்திற்கும் அனுப்பப்பட்டார்.
இங்கிருந்து தான் வாங் சியின் ‘ராஜா பகதூர்’ பயணம் தொடங்கியது.
சீனாவில் உள்ள குடும்பத்தைச் சந்திக்கும் வாங் சியின் முயற்சி தொடர்ந்தது
1969-ஆம் ஆண்டு வாக்கில் வாங்கின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
ஒருபுறம் வாங் புதிய நாட்டில், அதாவது இந்தியாவில் தனது புதிய வாழ்க்கையை நிலைநிறுத்த ஒருபுறம் முயன்று கொண்டிருந்தாலும், மறுபுறம் சீனாவில் உள்ள தனது குடும்பத்தினரையும் தாயையும் சந்திக்க முயன்று கொண்டிருந்தார்.
படிப்படியாக திரோடி மக்கள் வாங் சியை ஏற்றுக்கொண்டனர்.
ஆரம்பத்தில் அவருக்கு ஒரு மாவு மில்லில் வேலை கிடைத்தது, பின்னர் அவர் தனது சொந்த மளிகைக் கடையையும் திறந்தார்.
அவர் வேலை செய்த மாவு மில்லின் உரிமையாளர் அவருக்கு ‘ராஜ் பகதூர்’ என்று பெயர் வைத்தார்.
“நான் மெதுவாக இந்தியாவில் என்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த போது, திரோடியில் உள்ள என் நண்பர்கள் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அழுத்தம் கொடுத்தனர். ஒரு துணை வந்து எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்,” என்கிறார் வாங்.
நண்பர்களின் அழுத்தம் காரணமாகவும், இந்தியாவில் தனது வாழ்வை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டுசெல்லவும், வாங் 1974 ஆம் ஆண்டு திரோடியின் உள்ளூர்வாசியான சுஷிலாவை மணந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை ‘மைத்துனர்’ என்று அழைக்கத் தொடங்கினர்.
வாங் சியும் தன் வாழ்க்கையை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர முயற்சிக்கத் தொடங்கினார்.
“சீனாவிலிருந்து ஒருவர் திரோடிக்கு வந்துள்ளார் என்பது, அந்தக் காலத்தில் ஒரு அதிசயமாக இருந்தது. சீனாவிலிருந்து வருபவர் எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க நாங்கள் செல்வோம்…” என்று நினைவுகூர்கிறார்கள் அவரது அண்டை வீட்டார்.
மறுபுறம், வாங் தனது சொந்த நாடான சீனாவுக்குத் திரும்பிச் சென்று தனது தாயாரைச் சந்திக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.
அவரது முயற்சி 2013-இல் முதல் முறையாக வெற்றி பெற்றது.
அதே ஆண்டில், சீனா வாங் சியை தனது குடிமகனாக அங்கீகரித்து அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியது.
“தாயாரை சந்திப்பதற்கான போராட்டம் அவரது கல்லறையில் முடிந்தது”
பாஸ்போர்ட் வழங்கப்பட்ட பிறகும், வாங்கால் தனது தாயாரை சந்திக்க முடியவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, 2017 ஆம் ஆண்டில், பிபிசி அவரது கதையை உலகிற்கு அறிமுகப்படுத்திய போது, வாங் சிக்கு சீனாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அவரால் அங்கு தனது குடும்பத்தினரைச் சந்திக்க முடிந்தது, ஆனால் அவரது தாயார் இறந்துவிட்டார்.
அவரது தாயை நினைத்துப் பார்க்கும் போது அவரது தொண்டை அடைக்கிறது. “கடைசி நேரத்தில் என் அம்மாவைச் சந்திக்க முடியவில்லை. நான் சீனாவை அடைந்த போது, என் அம்மா வாழ்நாள் முழுவதும் நான் திரும்பி வருவதற்காகக் காத்திருந்ததாக கிராமவாசிகள் என்னிடம் சொன்னார்கள். கடைசி நேரத்தில், அவர் என்னை நினைத்து அழுது கொண்டே இருந்தார், அவர் இறந்துவிட்டார்” என்கிறார் வாங்.
“அம்மாவைச் சந்திக்க முடியாத வேதனை இன்னும் அப்பாவிடம் இருக்கிறது. அதை நினைத்து அவர் அழ ஆரம்பிக்கிறார்” என்கிறார் விஷ்ணு.
2017 ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்ட செய்திக்குப் பிறகு, இரு நாடுகளும் வாங் சி விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்தன.
50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சீனாவுக்குச் சென்று தனது குடும்பத்தினரைச் சந்திக்க வாங் முடிந்தது, ஆனால் இந்த மகிழ்ச்சியும் அமைதியும் அவரது வாழ்க்கையில் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
வாங் சி தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு இந்தியா திரும்பிய போது, சில மாதங்களுக்குள் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.
சீனாவுக்குப் போகவும் முடியாது, இந்தியாவில் தங்கவும் முடியாது
சீனாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறியது, ஆனால் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரும் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
இப்போது வாங் சியால் இந்தியாவில் நிரந்தரமாக தங்கவோ அல்லது சீனாவுக்குத் திரும்பவோ முடியாது.
வாங் சி சீனாவுக்கு நிரந்தரமாகத் திரும்புவது சாத்தியமில்லை. ராணுவத்தில் அவரது பணி குறித்து அங்கு உள் விசாரணை நடந்து வருவதாகக் கூறுகிறார் அவர்.
மறுபுறம், அவரால் தங்கள் குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் இங்கு விட்டுவிட்டு, இந்தியாவில் இருந்து வெளியேறுவது சாத்தியமில்லை.
85 வயதான அவரது முதுமையும், குடும்பத்தின் மோசமான பொருளாதாரச் சூழலும், நிலைமையை இன்னும் கடினமாக்கியுள்ளன.
“நான் சீனாவில் இல்லை. நான் இந்தியாவையும் விட்டு வெளியேற வேண்டுமென்றால் நான் எந்த நாட்டைச் சேர்ந்தவன்? இப்போது நான் எங்கு செல்ல வேண்டும்?”என்று வாங் சி மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார்.
“அப்பா தனது குடும்பத்தை சீனாவில் கண்டுபிடித்தார், நாங்கள் இங்கே இந்தியாவில் இருக்கிறோம். ஆனால், எனது வீடு இந்தியாவா அல்லது சீனாவா? என்று அப்பா அடிக்கடி கேட்பார்” என்கிறார் அவரது மகன் விஷ்ணு வாங்.
வாங் சி இரு நாடுகளுக்கும் இடையில் தனது வாழ்வை, தனது வீட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு