சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (செப்.21), நாளை மறுதினமும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரியில் தலா 7, சென்னை அம்பத்தூர், அயப்பாக்கம், கொரட்டூரில் தலா 6 செமீ திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, கரூர் மாவட்டம் தோமலை, சென்னை வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், புழல், மதுரவாயல், கொளத்தூர், அயனாவரம், மேடவாக்கம், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, சேலம் மாவட்டம் மேட்டூர், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.