• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Tomorrow Heavy Rain Chance at 7 District on Tamil Nadu

Byadmin

Oct 9, 2025


சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.10) முதல் அக்.15-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (அக்.10ம் தேதி) கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (அக்.11ம் தேதி) நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், அக்.12ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள், அக்.13ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்கள், அக்14ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (அக்.10ம் தேதி) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்.10ம் தேதி) தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே நாளை இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 13 செ.மீ மழை, ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளத்தில் 9 செ.மீ மழை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 7 செ.மீ மழை, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் 6 செ.மீ மழை, கடலூர் மாவட்டம் புவனகிரி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, நீலகிரி மாவட்டம் கோடநாடு, விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin