கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை வார இறுதி நாள் மற்றும் பவுர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளும், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்டு திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்ட பேருந்துகளில் கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் .
தென் மாவட்ட பேருந்துகளும், நகர்புற பேருந்துகளும் குறைக்கப்பட்டது . இதனால் வார விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகினர். மேலும் திருவண்ணாமலைக்கு தேவையான கூடுதல் பேருந்துகளும் போதுமான அளவு இயக்காததால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். மேலும் கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் முண்டியடித்துக்கொண்டு ஏறி செல்கின்றனர்.
தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 9, 11, 12ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 1,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து 9, 11, 12ம் தேதிகளில் 245 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து 9, 11, 12ம் தேதிகளில் 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.