• Thu. Jun 26th, 2025

24×7 Live News

Apdin News

வால்பாறையில்  சிறுமியை கொன்ற சிறுத்தை  கூண்டில் சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி  | Leopard That Killed Girl in Valparai Captured

Byadmin

Jun 26, 2025


வால்பாறை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

வால்பாறையில் கடந்த 20-ம் தேதி பச்சைமலை எஸ்டேட்டின் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கு இருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்த நிலையில் இன்று சிறுத்தை சிக்கியது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்து உள்ளது. இந்த குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா – மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மாலை 5 மணியளவில் மோனிகாதேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார். அவரது மூத்த மகள் ரோஷினி குமாரி (7) உடனிருந்தார். மோனிகாகுமாரி தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி குடிநீர் குழாய் அருகே இருந்தார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பதறியபடி மோனிகாதேவி ஓடி வந்தார். தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியின் கழுத்தில் கடித்து இழுத்து செல்வதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை தேடினர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், போலீஸார் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சிறுமி அணிந்து இருந்த ஆடை ரத்தக் கறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. அன்று இரவு முழுவதும் தேடியும் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை.

மீண்டும் 21-ம் தேதி காலை மோப்ப நாய்கள் உதவியுடன் நடைபெற்ற தேடுதல் பணியில் தேயிலை தோட்டத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 22- ம் தேதி அப்பகுதியில் 2 கூண்டு வைத்தனர்.

வனத்துறையினர் சுழற்சி முறையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம் நீங்கி நிம்மதி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை சகஜமாக உலா வருகிறது.கோழி, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த சிறுத்தை தற்போது குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகளை வேட்டையாடி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஒரு சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், கடந்த வாரம் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளார். தற்போது பிடிபட்டு உள்ள சிறுத்தையை அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்காமல் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.



By admin