பட மூலாதாரம், Getty Images for James Beard Foundation
நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார்.
நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் பெற்று அசத்தியுள்ளார் விஜய் குமார். தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமின்றி கலாசார மாற்றத்தின் புள்ளியாக இந்த விருது கருதப்படுகிறது.
உணவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் சென்னையைச் சேர்ந்த ராகேஷ் ரகுநந்தன் இது குறித்து பேசும் போது, “இந்த விருதுகளை ஏற்கனவே வென்ற தமிழ் வம்சாவளியினரான ராகவன் ஐயர் மற்றும் பத்ம லட்சுமியின் வழியே, விஜய் குமாருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம், உலக சமையல் அரங்கில் வளர்ந்து வரும் தென்னிந்தியர்களின் குரல்களை பிரதிபலிக்கிறது,” என்று கூறினார்.
“இலங்கை தமிழர்கள் மற்றும் இதர தென்னிந்திய உணவு முறைகளுடன், தமிழ் உணவுகள் உலக அரங்கில் உள்ள உணவகங்களில், மேம்படுத்தப்பட்ட, உயர்ந்த மற்றும் கலாசாரத்தில் வேரூன்றிய உணவு வகைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றும் அவர் கூறினார்.
தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அரசம்பட்டி என்ற சிறிய விவசாய கிராமத்தில் பிறந்தவர் விஜய் குமார். 44 வயதான அவர் எப்போதும் தன்னுடைய நினைவுகளில் இருந்து உணவை தேர்வு செய்கிறார். காடுகளும், உணவு தேடல்களும், விறகு அடுப்பும், வீட்டிற்கு தேவையான உணவை சமைக்கும் அம்மாவும் பாட்டியுமாக அந்த நினைவு நிரம்பியுள்ளது.
விருதை வாங்குவதற்காக மேடைக்குச் சென்ற அவர், “நான் வளரும் போது உண்ட உணவு, அக்கறையோடு, ஆத்மார்த்தமாக, நெருப்பில் சமைக்கப்பட்ட அந்த உணவு இன்று முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது,” என்று கூறினார். இந்த தருணம் நெகிழ்ச்சியான அதேநேரத்தில் கலாசாரத்திற்கு பெருமை தந்த தருணமாக விஜய்குமாருக்கு இருந்தது.
“ஏழைகளின் உணவு, பணக்காரர்களின் உணவு என்று ஒன்றில்லை. அது உணவு. அது வலிமை மிக்கது. உணவு மேஜையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது விலைமதிப்பற்ற உணர்வு,” என்று அந்த நிகழ்ச்சியின் போது விஜய்குமார் கூறினார்.
பட மூலாதாரம், Paul Mcdonough
திருப்புமுனையை ஏற்படுத்திய ‘செம்ம’ உணவகம்
இந்த வெற்றி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மைல்கல். அதேநேரத்தில் அவரை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வலிமையான செயல்.
“நான் சமைக்க ஆரம்பித்த காலத்தில் என்னைப் போன்ற கருத்த மேனி கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவன், இப்படியான இடத்திற்கு வர முடியும் என்று நினைத்ததே இல்லை,” என்று விருதை ஏற்றுக் கொள்ளும் உரையில் அவர் தெரிவித்தார். தன்னுடைய கலாசார பின்புலத்தை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் ஆண்களுக்கான பாரம்பரிய உடையான வேஷ்டியில் அவர் அந்த நிகழ்விற்கு வருகை புரிந்திருந்தார்.
சமீபத்தில் இரண்டு சமூக வலைதள இன்ஃப்ளூயென்சர்களால் ‘ட்ரோல்களுக்கு’ ஆளானார் விஜய். விஜய்க்கு ஆதரவாக சமையல் கலைஞரும், சமையல் புத்தக எழுத்தாளருமான பத்மலட்சுமி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த இன்ஃப்ளூயென்சர்களை, கலாசார உணர்வற்றவர்கள் என்று அழைத்தார் பத்மலட்சுமி.
பிபிசியிடம் பேசிய பத்மலட்சுமி, “தென்னிந்திய உணவு என்பதையும் தாண்டி, எளிமையாக வளர்ந்து, இருக்கின்ற பொருட்களை வைத்து சமைத்தவர் என்பதற்காகவும் விஜயின் கதை முக்கியமானதாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
“இப்படியாக இருக்கின்ற பொருட்களை வைத்து சமைக்கின்ற திறமை அவரின் பணிக்கான நெறிமுறைகளை மட்டுமின்றி, அவரின் சுவை உணர்வு, உணவுப் பொருட்கள் மற்றும் உலகம் பற்றிய புரிதலையும் அடைய உதவியுள்ளது. உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அதனை மேம்படுத்தினால், படைப்பு உலகில் நீங்கள் பெரிய இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் விஜய் உருவாக்கியுள்ளார்,” என்றும் அவர் கூறினார்.
விஜயின் பயணம் அவ்வளவு எளிமையானதாக இல்லை.
பெரிய நகரத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால் சமையல் படிப்பை தேர்வு செய்தார் விஜய். சென்னையில் அமைந்துள்ள தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் அவருடைய பயணம் துவங்கியது. பிறகு கப்பல்களிலும், பல உணவகங்களிலும் அவர் பணியாற்றினார். இறுதியாக அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவில் அமைந்திருக்கும் ‘தோசா’ உணவகத்தில் பணியில் சேர்ந்தார்.
அனபாலஜிடிக் ஃபுட்ஸ் (Unapologetic Foods) என்ற நியூயார்க்கின் உணவக குழுமத்தின் ரோனி மாஸும்தார் மற்றும் சிந்தன் பாண்டியாவுடன் கை கோர்த்த போது அவர் வாழ்வில் முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து ‘செம்ம’ என்ற உணவகத்தை 2021-ஆம் ஆண்டு விஜய் குமார் துவங்கினார்.
பட மூலாதாரம், Paul Mcdonough
நத்தைப் பிரட்டல் வறுமையில் பிறந்த உணவல்ல
“எங்களின் உணவு வழியாக நாங்கள் யார் என்பதை உலகிற்கு கூறவும், எங்களின் மரபை கௌரவிக்கவும் வேண்டும் என்ற எண்ணம்,” மூவரிடம் இருப்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.
“அந்த தருணத்தில், அது வெறும் உணவு மட்டுமல்ல. அது அடையாளம் சார்ந்தது,” என்று மஜூம்தார் பிபிசியிடம் தெரிவித்தார். “வெகு காலமாக இந்திய உணவுகள் அமெரிக்காவில் வட-மேற்கத்திய லென்ஸ்களின் வழியே எளிமையான உணவுகளாகவே பார்க்கப்பட்டு வந்தன. ‘செம்ம’ அந்த எண்ணங்களை உடைத்தெறிந்து, நேர்மையை பகிர்ந்து கொண்டது.”
தன்னுடைய உணவுகளை உலகிற்கு வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியில் குதித்தார் விஜய். “நாம் வளர்ந்த போது நாம் உண்ட உணவுகள் குறித்து பேசும் போது அவரது கண்கள் பிரகாசமாகும். ஆனால் அந்த உணவுகள் எப்போதாவது தான் உணவகங்களில் பரிமாறப்படுகின்றன,” என்று மஜூம்தார் கூறினார்.
பருவத்திற்கு ஏற்ப கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு உண்மையான கிராமத்து உணவுகளை பரிமாறுவதில் தான் விஜயின் பலம் இருக்கிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உணவுகளை அவர் சமைப்பார். பண்ணைகளில்-இருந்து- மேஜைக்கு என்ற அணுகுமுறையில் தான் அவருடைய உணவுகள் இருக்கும். “அம்மாவும் பாட்டியும் சமைத்ததைப் போன்றே,” என்று அவர் கூறுவதுண்டு. ‘செம்ம’ உணவகம் அந்த எளிமையைக் கொண்டாடும் இடமாக இருக்கிறது. அந்த எளிமை பிரதிபலிக்கிறது.
வெளிநாடுகளில் கிடைக்கும் இந்திய உணவுகள் என்ற ஒரு கற்பிதம் இருக்கிறது. அதை ‘செம்ம’வின் உணவுப்பட்டியல் உடைத்து எறிகிறது. ‘நானும்’, ‘பட்டர் சிக்கனும்’ இங்கே கிடைப்பதில்லை. ஃப்ரெஞ்ச் நத்தையில் சமைக்கப்படும் உணவு வகைகளைப் பார்த்த பிறகு விஜய் ஒரு மாற்றத்தை உணர்ந்தார்.
குழந்தையாக இருக்கும் போது, வீட்டில் அரிசி இல்லாத நாட்களில், குடும்பத்துடன் சேர்ந்து வயல்வெளிகளில் நத்தைகளை எடுக்கச் செல்வார் விஜய். காரசாரமான நத்தை புளிக்குழம்பு செய்து சாப்பிடுவார்கள். சிறுவனாக இருக்கும் போது, அந்த உணவை நினைத்தால், “வறுமையில் பிறந்த உணவு,” என்ற எண்ணம் ஏற்பட்டதாக விஜய் தெரிவித்தார். ஆனால் ஃபிரெஞ்ச் மக்கள் நத்தையில் சமைக்கப்பட்ட உணவுகளை பெருமையாக பரிமாறியதை பார்த்த போது தன் வீட்டில் உண்ட உணவு குறித்த அவர் எண்ணம் மாறியது.
உணவுப் பற்றாக்குறையின் நினைவாக நீட்சியாக இல்லாமல், இன்று ‘செம்ம’ உணவுப்பட்டியலில் நத்தைப் பிரட்டல் எதிர்ப்பு மற்றும் கலாசார பெருமையின் அடையாளமாக இடம் பெற்றிருக்கிறது.
செம்ம உணவகத்தில், மிளகு ரசம், புளி நண்டு, வாழைப்பூ வடை, தோசை என்று உணவுப் பட்டியல் நீள்கிறது. தாயகத்தை விட்டு வெளியே வசிக்கும் தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமான இணைப்பை ஏற்படுத்துகிறது.
பட மூலாதாரம், Paul Mcdonough
கிராமத்து விருந்து
விஜயின் எண்ணம் தமிழ்நாட்டின் கிராமத்து உணவுகளை உலக அரங்கிற்கு எடுத்து வந்து, நியூயார்க்கின் ஆடம்பரமான இடங்களில் வழங்க வேண்டும் என்பது தான். போட்டிகள் நிரம்பியிருக்கும் நியூயார்க்கின் உணவக துறையில் விஜயின் முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆழம், பிராந்தியம் மற்றும் வலிமை மிக்க உணர்வார்ந்த இணைப்பு போன்றவை அந்த உணவுகளில் இருந்தன.
தமிழ் திரையுலக நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதாவைப் போற்றும் விதமாக ‘செம்ம’வில் காக்டெய்ல்கள் வழங்கப்படுகின்றன. சென்னையின் தட்பவெட்பத்தை உணர்த்தும் வகையில் தான் ‘செம்ம’ அலங்கரிக்கப்பட்டுள்ளது. உணவு சமைப்பவர்கள் நன்றி உணர்வுடனும், விழிப்புடனும் சமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
“லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள கோல்ட் காலாவில் 650 விருந்தினர்களுக்கு இரவு உணவை தயாரிப்பதற்காக அவரை நான் அழைத்தேன். அவர் எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் பணியாற்றினார். ஒரு வருடம் கழித்தும், அன்றிரவு பரிமாறப்பட்ட உணவு எவ்வளவு அருமையாக இருந்தது என்று விருந்தினர்கள் கூறுகின்றனர்,” என்று பத்மலட்சுமி நினைவு கூறுகிறார்.
பிராந்திய இந்திய உணவு பழக்கவழக்கத்தை ஆடம்பரமான உணவு மேஜைகளுக்கு எடுத்துவரும் திறமை கொண்டவர் என்று அவரைப் புகழ்கிறார் பத்மலட்சுமி.
விஜயின் நீண்ட பயணத்தில் விருதுகள் ஒரு இயற்கை நிகழ்வைப் போல இருக்கிறது. நியூயார்க்கில் மிச்சிலின் ஸ்டார் விருதைப் பெற்ற, தென்னிந்திய உணவுகளை மட்டுமே வழங்கும், முதல் உணவகம் தான் செம்ம. நியூயார்க் டைம்ஸின் தலைசிறந்த 100 உணவகங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது இந்த உணவகம். தற்போது இந்த விருதும் விஜய் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல வழிகளில் சிந்தித்தால், விஜய் குமார் உணவை மட்டும் பரிமாறவில்லை. நினைவை, பெருமையை, புரட்சியை பரிமாறுகிறார்.
இந்த விருது அவரின் திறமைக்கான அங்கீகாரம். அதே நேரத்தில் மசாலாப் பொருட்கள் மற்றும் எளிமையான வகைகளைக் கொண்ட இந்திய பிராந்திய உணவு வகைகள் உலக அரங்கில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்யும் அங்கீகாரமும் கூட.
புலம்பெயர்ந்த இந்திய இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது விஜயின் வெற்றி. நம்முடைய உணவுகளுக்கு பெரும் பெருமையை தேடித் தந்துள்ளது என்று பத்மலட்சுமி கூறுகிறார். இது அவரின் மரபாக தொடரும் என்றும் அவர் கூறினார்.
“பிராந்தியம் முக்கியமானது என்பதை உணர்த்துகிறது இந்த விருது. நம்முடைய கதைகளுக்கும், நம்முடைய பின்புலத்திற்கும் உலக அரங்கில் இடம் இருப்பதையும் இந்த வெற்றி உணர்த்துகிறது,” என்று மஜூம்தார் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு