பட மூலாதாரம், insta/rashmika_mandanna
திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதம் இரண்டு பிரபலங்களுக்கு இடையிலான திருமணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அந்தத் திருமணத்தின் பின்னணியில் உள்ள பாரம்பரியத்தைப் பற்றியதும் கூட.
அதுதான் ‘கொடவா’ பாரம்பரியம்.
பட மூலாதாரம், insta/rashmika_mandanna
கொடவா பாரம்பரிய திருமணம் முறை பற்றிய செய்திகள்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் ராஷ்மிகா. குடகு என்பது கூர்க் என்றும் அழைக்கப்படுகிறது. ராஷ்மிகா கூர்க்கில் கல்வி பயின்றார்.
அவர்களது திருமணச் சடங்கு வழக்கமான இந்து முறைப்படி மட்டுமல்லாமல், கொடவா பாரம்பரியத்தின் படியும் நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், தங்களது திருமணம் எந்த பாரம்பரியத்தின்படி நடந்தது என்பதை விஜய்யோ அல்லது ராஷ்மிகாவோ வெளிப்படுத்தவில்லை.
கர்நாடகாவின் குடகு (கூர்க்) பிராந்தியத்தில் பொதுவாக திருமணங்கள் குடகு பாரம்பரிய பாணியில் நடத்தப்படுகின்றன. குடகுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடவாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
ராஷ்மிகா கர்நாடகாவின் குடகுப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூர் பாரம்பரியப்படி திருமணம் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
பட மூலாதாரம், insta/rashmika_mandanna
மருமகள் முறை திருமணம் என்றால் என்ன?
வழக்கமான இந்து மரபுகளிலிருந்து கொடவா திருமணம் மாறுபட்டது.
இந்து திருமணங்களில் அர்ச்சகர்கள் மந்திரங்கள் முழங்க பூஜை, தாலி கட்டுதல் மற்றும் அட்சதை தூவுதல் போன்றவை இடம்பெறும். ஆனால் , கொடவா பாரம்பரியத்தில் அர்ச்சகர்களே கிடையாது.
குடும்பத்தின் பெரியவர்களே திருமணச் சடங்கை நடத்துகிறார்கள். திருமண மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டு முன்னோர் வழிபாடு நடைபெறுகிறது.
பாரம்பரிய கொடவா திருமணத்திற்கும், பாரம்பரிய இந்து திருமணத்திற்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாக மைசூரைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
பாரம்பரிய கொடவா திருமணங்களில் மிகக் குறைவான பண்டிதர்கள் தான் கலந்து கொள்கிறார்கள் என்று ரகு சர்மா கூறினார்.
தானும் இது போன்ற நான்கு அல்லது ஐந்து பாரம்பரிய கொடவா திருமணங்களை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், insta/rashmika_mandanna
இரண்டு நாள் திருமண விழா
கொடவா பாரம்பரியத்தில், ஒரு திருமணம் 2 நாட்கள் நடைபெறும் என்று கொடவாக்லான்.காம் (Kodavaclan.com) கூறுகிறது.
கொடவாக்லான் (Kodavaklan) இணையதளத்தில் சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு :
திருமணத்தின் முதல் நாளில், மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு வருகிறார்கள்.
ஒரு திருமணப் பந்தல் அமைக்கப்படுகிறது. இது மா இலைகள், வாழை இலைகள் மற்றும் பலா மரக் கிளைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
“இது தலைமுறைதலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரியம். திருமணப் பந்தல் கூட பால் சிந்தும் மரங்களின் குச்சிகளால் செய்யப்படுகிறது. அதுவும் அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது” என்று ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
பன்றி மற்றும் காய்கறிகளும் வெட்டப்படுகின்றன.
இந்த முழு சடங்கிலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த சடங்கு ‘ஊர் கொடுவோ’ அல்லது ‘பந்தலா கங்கி’ அல்லது ‘தேரனேபெப்போ’ என்று அழைக்கப்படுகிறது.
கொடவா பாரம்பரியத்தில் திருமணச் சடங்குகளில் பன்றி இறைச்சி பரிமாறுவது வழக்கம்.
“திருமணத்தில் கண்டிப்பாக அசைவம் இருக்கும். பன்றி இறைச்சி நிச்சயம் பரிமாறப்படும். இது அவர்களின் திருமணத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படும்” என்று ரகு சர்மா கூறினார்.
மாலையில், அனைவரும் ஒன்றாகக் கூடி கொண்டாடுகிறார்கள்.
பட மூலாதாரம், insta/rashmika_mandanna
இரண்டாவது நாளில் என்ன நடக்கும்?
இரண்டாம் நாள் ‘மங்களா’ என்று அழைக்கப்படுகிறது.
காலையில், மணமகனின் முகத்தில் பால் தடவப்பட்டு சவரம் செய்யப்படுகிறது. பின்னர், மங்களாஸ்நானம் செய்யப்படுகிறது. இதில் மணமகனின் தாயார் மற்றும் திருமணமான இரண்டு பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் பாரம்பரிய ‘குப்யா’ உடையும், இடுப்பில் ஒரு வாளையும் அணிவார்கள்.
இருப்பினும், விஜய்-ராஷ்மிகா திருமணச் சடங்கின் போது சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில், விஜய் இந்த வகை கொடவா உடையில் காணப்படவில்லை.
விஜய் கீழே வெள்ளை உடுப்பும், இடுப்பில் தங்க பெல்ட்டும், மேலே சிவப்பு நிற மேலாடையும் அணிந்திருந்தார்.
மணமகள் தனது மங்களாஸ்நானத்தை முடித்த பிறகு, அவர் வளையல் அணியும் சடங்கு நடத்தப்படுகிறது.
திருமணத்திற்காக, மணமகள் சிவப்பு நிற, தங்கக் கரை கொண்ட புடவையில் அலங்கரிக்கப்படுகிறார்.
‘பலே பிருது’ என்பது திருமணச் சடங்கின் ஒரு முக்கிய அம்சமாகும். அதன்படி, திருமண மண்டபத்திற்கு செல்லும் பாதையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாழை மரத் தண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
மணமகள் அல்லது மணமகனின் மாமா, ஒரு பெரிய கத்தியின் உதவியால் இந்த வாழைத் தண்டுகளை ஒரே வீச்சில் வெட்ட வேண்டும்.
“வாழைத் தண்டுகளை வெட்டும் கலாசாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது” என்று ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
“சில இடங்களில் மணமகனும் வாழைத் தண்டுகளை வெட்டுகிறார். மற்ற இடங்களில் மாமா அதைச் செய்கிறார்,” என்று அவர் கூறினார்.
மணமகள் மீதான உரிமைகளைக் குறிக்கும் 12 கற்கள்
அவர்கள் வாழைத் தண்டை மூன்று முறை சுற்றி வந்து, பூக்களைத் தொட்டு, பின்னர் வீரத்தின் அடையாளமாக அந்த வாழைத் தண்டை வெட்டுகிறார்கள்.
பின்னர் திருமண மேடையை மூன்று முறை வலம் வந்து கிழக்கு நோக்கி அமர்கிறார்கள்.
அதன்பின் ஆசிர்வாதம் நடைபெறுகிறது. முதலில் தாய், பிறகு தந்தை, அதன்பின் மற்ற பெரியவர்கள் ஆசி வழங்குகிறார்கள்.
பின்னர் மணமகள் அங்கு வந்து பால், பரிசுகள் மற்றும் தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் அடங்கிய பையை மணமகனிடம் வழங்குகிறார்.
மல்லிகை மாலைகள் பரிமாறப்படுகின்றன. பின்னர், பெரியவர்கள் புனித விளக்கின் முன் நின்று, மணமகளின் பொறுப்பை மணமகனிடம் ஒப்படைப்பதாகக் கூறுகிறார்கள்.
மணமகள் வீட்டின் பெரியவர்கள், மணமகளின் மீதான அனைத்து உரிமைகளையும் வழங்குவதாகக் கூறி, மணமகன் வீட்டுப் பெரியவர்களிடம் 12 கூழாங்கற்களைக் கொடுக்கிறார்கள்.
மணமகன் வீட்டுப் பெரியவர்கள் 11 கற்களை எடுத்துக் கொண்டு ஒன்றை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் மணமகள் மீது அவர்களுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்க இது செய்யப்படுகிறது.
பின்னர் மணமகன் மணமகளை அழைத்துச் செல்வதோடு சடங்கு முடிகிறது. இந்தத் திருமணம் மிகக் குறுகிய நேரத்தில் நடத்தப்படும் என்று ரகு சர்மா கூறினார்.
இரவு விருந்தில் பெண்களுக்கு முதலில் உணவு பரிமாறப்படுவது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது.
மாலையில், மணமகள் கங்கா பூஜை செய்கிறார். பின்னர் பாதங்களில் சந்தானம் பூசப்படுகிறது.
அவர்கள் கிணற்றுக்குச் சென்று வெற்றிலை, கிழங்கு, அட்சதை மற்றும் தேங்காய் ஆகியவற்றை நீரில் கலக்கிறார்கள். பின்னர் மணமகளுடன் நீரைச் சேகரித்து பானையில் ஊற்றுகிறார்கள்.
ஒரு பானை தண்ணீர் கொண்டு வரப்பட்டு புனித விளக்கின் முன் வைக்கப்படுகிறது. அங்கிருந்து புகுந்த வீட்டில் மணமகளின் பொறுப்பு தொடங்குவதாக நம்பப்படுகிறது.
திருமணச் சடங்கு ‘கொம்பரேக் கொடுவோ’ உடன் முடிவடைகிறது. இதன் ஒரு பகுதியாக, மணமகன் மணமகளைத் தனது அறைக்குள் அழைத்து, அவரது முகத்தில் இருக்கும் திரையை அகற்றுகிறார். அதன் பிறகு, அவர் அவருக்கு ஒரு தங்க திருமண மோதிரத்தைப் பரிசளிக்கிறார்.
இத்துடன், திருமண விழா நிறைவடைகிறது.
பட மூலாதாரம், insta/rashmika_mandanna
விஜய் மற்றும் ராஷ்மிகாவின் திரையுலகப் பயணம்
ராஷ்மிகா மந்தனா 2016-ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2018-இல் ‘சலோ’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் தேவரகொண்டா, 2011-ஆம் ஆண்டு ‘நுவ்விலா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். சில படங்களில் குணச்சித்திர நடிகராகத் தோன்றினார்.
2016-ஆம் ஆண்டு ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். அடுத்த ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் ஒரு நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார்.
தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘ரணபலி’ படத்தில் நடித்து வருகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு