9
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த “ஜன நாயகன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் இணையத்தில் வெளியானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
படம் இணையத்தில் வெளியானதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முதலில் வெறும் 5 நிமிடக் காட்சிகள் மட்டுமே வெளியானதாக கூறப்பட்டது. விஜயின் அறிமுகக் காட்சி, சிறையில் நடக்கும் சண்டைக் காட்சி, எம்.ஜி.ஆர் புகைப்படம் பற்றிய காட்சிகள், “ஒரு பேரே வரலாறு” என்ற பாடல் காட்சிகள் என்பவை வெளியானதாகவும், இன்று (10) அதிகாலை வேளையில் முழு படமும் இணையத்தில் வெளியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விஜயின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக, அவர் நடிக்கும் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டிருந்த “ஜன நாயகன்” கடந்த ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்தது. எனினும், மதம், பாதுகாப்பு படையினர் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் தணிக்கை சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகளுக்கு படக்குழுவினர் முகங்கொடுத்து வரும் நிலையில் இதுவரை படம் வெளியாகவில்லை.
தற்போது விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் இணையத்தில் ஒருசிலரால் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், படம் இணையத்தில் வெளியானது தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், படத்தின் இயக்குநர் எச்.வினோத் கூறுகையில்,
“ஜன நாயகன்” படத்தை யாரும் பகிரவேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் படக்குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஜன நாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் கடைசிப் படம் எனத் தெரிவிக்கப்பட்டதாலும், படத்தில் சமூக, அரசியல் கருத்துக்கள் பல கூறப்படுவதாலும் ரசிகர்கள் மத்தியில் “ஜன நாயகன்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கும் சூழ்நிலையில், படம் இணையத்தில் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகியிருக்கிறது.