ஹரியாணா மாநிலம் ஜூலானா தொகுதியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகாட் போட்டியிட்டார். அவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், தேர்தல் களத்தில் வெற்றி பெற்றார்.
ஜூலானா தொகுதியில் அவர் 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
என்னதான் ஜூலானாவில் மகிழ்ச்சி நிலவினாலும், வினேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இதைவிட பெரிய வெற்றியை எதிர்பார்த்தனர்.
வினேஷ் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு பேசிய சந்தர் என்ற நபர், “வினேஷ் வெற்றி பெற்றார் ஆனால் அவர் பாஜகவின் யோகேஷ் குமாரை தோற்கடிக்கவில்லை”, என்றார்.
“மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆனால் அதில் ஏதோ குறைகிறது. இது நிச்சயமாக மல்யுத்த வீரர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. ஆனால், வினேஷ் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்”, என்று அஜித் என்ற நபர் கூறுகிறார்.
வினேஷின் வெற்றியின் பலன் என்ன?
காங்கிரஸ் கட்சி 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலானா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 2005-ஆம் ஆண்டு முதல் அந்த கட்சியால் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை.
ஹரியாணாவில் ஜாட் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் பங்கர் பகுதியில் ஜூலானா தொகுதி அமைந்துள்ளது.
ஜூலானா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேஷ் பைராகி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளர் கவிதா தலால் ஆகியோரை எதிர்த்து வினேஷ் போட்டியிட்டார்.
சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, வினேஷ் நடத்திய சாலை பேரணிகள் மற்றும் பிரசார கூட்டங்களில் பெண்களின் வருகை அதிகமாக இருந்தது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து திரும்பிய பிறகு, வினேஷ் போகாட் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
பாரீஸில் இருந்து இந்தியா வந்த வினேஷ் போகாட்டை வரவேற்க டெல்லி விமான நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் ஹூடா வந்திருந்தார். வினேஷின் வரவேற்பு ஊர்வலத்திலும் அவர் இருந்தார்.
அந்த ஊர்வலத்தில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் உடன் இருந்தார். அப்போதிருந்து வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடலாம் என ஊகங்கள் எழுந்தன.
ஆனால், காங்கிரஸ் கட்சி பஜ்ரங் புனியாவை வேட்பாளராக நிறுத்தவில்லை.
“மோசமான காலங்களில்தான் யார் நம்முடன் நிற்பார், யார் இருக்கமாட்டார் என்பது தெரியும்”, என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த நாள் அன்று வினேஷ் போகாட் கூறினார்.
“மக்கள் உங்களை நம்ப வேண்டும், நீங்கள் அவர்களை நம்ப வைக்க வேண்டும். அரசியல் என்பது மக்களோடு ஒன்றாக இணைந்து இருப்பதுதான்”, என்று வினேஷ் கூறியிருந்தார்.
பலவீனமான வெற்றி
விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், மல்யுத்த வீராங்கனை போன்ற கூறுகளை முன்வைத்து மக்களின் அனுதாபத்தை பெறலாம் என்று காங்கிரஸ் கட்சி நம்பியது. ஆனால் வினேஷின் பலவீனமான வெற்றி வேறு ஒன்றை உணர்த்துகின்றது.
“வினேஷின் வெற்றியை காங்கிரஸின் தோல்வியாக பார்க்கவேண்டும். தேர்தலில், ஜாட் மற்றும் ஜாட் அல்லாதவர்களாக வாக்குகள் பிரிந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி சிக்கலை சந்திக்க வேண்டியிருந்தது”, என்று ஹரியாணாவின் அரசியல் ஆய்வாளரும், மகாராணா பிரதாப் தேசியக் கல்லூரியின் பேராசிரியருமான டாக்டர் விஜய் சவுகான் கூறினார்.
வினேஷுக்கு காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் அளித்து வருவதும் அக்கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் நம்பப்படுகிறது.
“நாடாளுமன்ற தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களை வேட்பாளராக நியமித்ததன் மூலம் பாஜக கட்சி பலன் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அந்த உத்தி பலன் அளித்துள்ளது”, என்று அரசியல் ஆய்வாளர் குஷால் பால் கூறுகிறார்.
போராட்டங்கள் நிறைந்த பயணம்
மல்யுத்தம் முதல் அரசியல் வரை, வினேஷின் பாதை அவ்வளவு சுலபமாக இல்லை.
வினேஷ் போகாட், மற்ற மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் உடன் இணைந்து அப்போதைய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வினேஷின் பிரசாரம் பெண் வாக்காளர்களுடன் ஒரு முக்கிய பிணைப்பை உருவாக்கியது. அவரது இந்த வெற்றி அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.
வினேஷ் போகாட் 2014, 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2024-ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாகியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்திய பெண் வீராங்கனை ஆனார் வினேஷ் போகாட்.
“இந்த தேர்தல் வெற்றி பெண்களுக்கு முக்கியமானது. ஹரியாணாவில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் எழுப்பி வெற்றி பெற்றது இதுவே முதல் முறை. இது பெண்களுக்கு மேலும் தைரியத்தை அளிக்கும்”, என்று ஹரியாணாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜக்மதி சங்வான் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.