0
கொழும்பு சி ஆர் அண்ட் எவ் சி மைதானத்தில் பரபரப்பு, விறுவிறுப்பு மற்றும் உற்சாகத்துடன் பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டிருந்த சி றக்பி டெக் கார்னிவல் போட்டியில் வித்யார்த்த/புஷ்பதான கல்லூரிகளின் பழைய மாணவ, மாணவிகள் கூட்டு அணி பிரதான கிண்ணப் பிரிவில் சம்பியனானது.
இலங்கையின் புகழ்பூத்த முன்னாள் றக்பி வீரரும் முன்னாள் சர்வதேச றக்பி மத்தியஸ்தருமான டில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலான ஏகோல் றக்பி நிறுவனம் இந்த கொண்டாட்ட சி றக்பி போட்டியை அண்மையில் நடத்தியிருந்தது.
றக்பி விளையாட்டில் பிரசித்திபெற்ற கல்லூரிகளின் முன்னாள் விரர்களும் அந்தக் கல்லூரிகளின் பெண் சகோதர பாடசாலைகளின் பழைய மாணவிகளும் ஒவ்வொரு அணியாக கூட்டிணைந்து இப் போட்டியில் பங்குபற்றினர்.
16 அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின் பிரதான கிண்ணப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் விஞ்ஞானம்/கல்கிஸ்ஸை மகளிர் உயர்தர பாடசாலை கூட்டு அணியை 1 – 0 என்ற புள்ளி வித்தியாசத்தில் வித்யார்த்த/புஷ்பதான கூட்டு அணி வெற்றிகொண்டு சம்பியனானது.
கோப்பை பிரிவுக்கான இறுதிப் போட்டியில் தேர்ஸ்டன்/தேவி பாலிகா கூட்டு அணியை 2 – 1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட கிங்ஸ்வூட்/கண்டி மகளிர் உயர்தர பாடசாலை கூட்டு அணி சம்பியனானது.
குவளைப் பிரிவில் தர்மராஜ/மகாமாயா கூட்டு அணியை வெஸ்லி/மெதடிஸ்த கூட்டு அணி 1 – 0 என வெற்றிகொண்டு சம்பியனானது.
16 கூட்டு அணிகளைக் கொண்ட 32 பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மாணவிகளினதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் வருடாந்த ஓன்றுகூடல் நிகழ்ச்சியாக அமைந்த சி றக்பி டெக் கொண்டாட்ட விழாவில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தத்தமது அணிகளை உற்சாகப்படுத்தினர்.
இந்தக் கொண்டாட்டத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்ச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, ஃபெயார்வே ஹோல்டிங்ஸ், எலிபன்ட் ஹவுஸ் உட்பட இன்னும் சில நிறுவனங்கள் அனுசரணை வழங்கி இருந்தன.