0
வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தனிப்பட்ட வணிகர்களுக்கு புதிய டிஜிட்டல் வரி விதிமுறைகள் குறித்து முக்கிய எச்சரிக்கையை இங்கிலாந்து வருவாய் மற்றும் சுங்கத் துறை (HMRC)விடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய டிஜிட்டல் வரி அறிக்கையிடல் முறையைத் தொடங்க வேண்டும் என்று சுமார் 864,000 வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தனிப்பட்ட வணிகர்களுக்கு HMRC நினைவூட்டியுள்ளது.
ஆண்டுக்கு £50,000-க்கும் அதிகமான வாடகை வருமானம் ஈட்டும் வீட்டு உரிமையாளர்கள், ‘Making Tax Digital’ (MTD) முறைக்குத் தயாராக வேண்டும். இந்த முறையின் கீழ், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வருமான விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இதற்காக அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துவது அவசியம் என HMRC தெரிவித்துள்ளது. இது வரி விவகாரங்களை எளிதாக நிர்வகிக்கவும், பிழைகளைக் குறைக்கவும் உதவும் என MTD பணிப்பாளர் கிரேக் ஓகில்வி தெரிவித்துள்ளார்.
£30,000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு அடுத்த ஆண்டும், £20,000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு 2028-ஆம் ஆண்டிலும் இந்த விதிகள் அமலுக்கு வரும். இருப்பினும், வழக்கமான ஜனவரி மாத வரித் தாக்கல் (Tax returns) முறையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளைத் தாமதமாகச் சமர்ப்பிப்பவர்களுக்கு அபராதப் புள்ளிகள் வழங்கப்படும். நான்கு புள்ளிகளை எட்டும்போது £200 அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், ஏப்ரல் 2026இல் இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு முதல் 12 மாதங்களுக்கு அபராதப் புள்ளிகள் வழங்கப்படாது என அரசு கூறியுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் இந்த மாற்றங்களுக்குத் தயாராவது அவர்களின் வரிச் சுமைகளைச் சரியாக நிர்வகிக்க உதவும் என்று HMRC வலியுறுத்தியுள்ளது.