காணொளி: மதுரோ பிடிக்கப்பட்ட போது என்ன நடந்தது? அமெரிக்க ஜெனரல் விளக்கம்
சனிக்கிழமை வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. அவர் மீது போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, அமெரிக்காவிற்கு எதிராக இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருப்பதற்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிக்கோலஸ் மதுரோவின் சமீபத்திய புகைப்படம் என ஒரு புகைப்படத்தையும் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், வெனிசுவேலா மீதான இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவு செயலர் மார்கோ ரூபியா, ஜெனரல் டேன் கெய்ன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
வெனிசுவேலா மீதான ராணுவ நடவடிக்கையை அசாதாரண நடவடிக்கை என குறிப்பிட்ட டிரம்ப், வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி என அனைத்து வழிகளிலும் அபாரமான அமெரிக்க ராணுவ சக்தி பயன்படுத்தப்பட்டதாக கூறினார்.
வெனிசுவேலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்க போவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
“பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை செய்யக்கூடிய நேரம் வரும் வரை நாங்கள் நாட்டை நிர்வகிக்க போகிறோம். வேறு யாராவது உள்ளே நுழைவதை நாங்கள் விரும்பவில்லை.
அப்படி நடந்தால் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் எதிர்கொண்ட அதே சூழல் மீண்டும் ஏற்படும். எனவே பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் வரை நாங்கள் நாட்டை நிர்வகிக்க போகிறோம். அதிகார மாற்றம் நியாயமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதுதான் எங்கள் நோக்கமே.” என்று டிரம்ப் கூறினார்.
இந்த நடவடிக்கைக்கு operation absolute resolve என பெயரிடப்பட்டதாக குறிப்பிட்ட ஜெனரல் டேன் கெய்ன், மதுரோ பிடிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதை விவரித்தார்.
இந்த ராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்புப் பணிகள் குறித்து பேசிய அவர், மதுரோ எங்கு வசித்தார், என்ன சாப்பிட்டார் என்பது உட்பட அவரை பற்றிய விவரங்களைக் கண்டறிய பல மாதங்கள் புலனாய்வுப் பணிகள் நடைபெற்றதாக குறிப்பிட்டார்.
டிரம்ப் பேசும் போது, தேவைப்பட்டால் வெனிசுவேலா மீது இரண்டாவது பெரிய தாக்குதலை நடத்தவும் தயாராக இருந்ததாக கூறினார். மதுரோவும் அவரது மனைவியும் தற்போது அமெரிக்க நீதித்துறையை எதிர்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார். வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்கள் குறித்து பேசிய டிரம்ப் வெனிசுவேலாவில் எண்ணெய் உள்கட்டமைப்பு பழுதடைந்துள்ளதாகவும், அதை அமெரிக்க எண்னெய் நிறுவனங்கள் சென்று சரி செய்வார்கள் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை அமெரிக்க இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மற்றும் அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்து விளைவுக்கும் எவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
“பயங்கரவாதிகளையும் குற்றவாளிகளையும் அமெரிக்காவுக்கு எதிராக தண்டனையின்றிச் செயல்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இந்த மிக வெற்றிகரமான நடவடிக்கை, அமெரிக்க இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அல்லது அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.” என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ பேசும் போது இந்த நிலையைத் தவிர்க்ககு மதுரோவுக்குப் பல வாய்ப்புகள் இருந்ததாகவும், ஆனால் அதற்குப் பதிலாக அவர் காட்டுத்தனமாக நடந்துகொள்ள முடிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினார். மதுரோ சட்டப்பூர்வமான அதிபர் அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.
எதுவும் நடக்காது என மதுரோ நினைத்ததாக கூறிய மார்கோ ரூபியோ, டிரம்ப் விளையாட்டுக்காரர் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
டிரம்பின் உரையில் மிக கவனிக்கத்தக்க ஒரு விஷயம், வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என குறிப்பிட்டது. ஆனால், அதை அமெரிக்கா எப்படி செய்யும் என்பதை அவர் தெளிவாக கூறவில்லை. பின்னர், செய்தியாளர்கள் அவரிடம் அமெரிக்கா நிர்வகிக்கும் என்றால் அமெரிக்க படைகள் அங்கிருக்குமா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், தரைப்படைகளை அனுப்ப நாங்கள் பயப்படவில்லை, அமெரிக்க இராணுவம் நேற்று இரவு மிக அதிக அளவில் தரைப்படைகளை அனுப்பியிருந்தது என்றார். அந்த நாடு சரியாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்றும் டிரம்ப் கூறினார்.
என்ன குறிப்பிட்ட வழிமுறையை பயன்படுத்த போகிறீர்கள் என மீண்டும் செய்தியாளர்கள் கேட்ட போது, நாங்கள் இப்போது சிலரை நியமித்து வருகிறோம், அந்த நபர்கள் யார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்போம் என கூறினார்.
பின்னர் வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுடன் பேசுனீர்களா என ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அவரிடம் தான் பேசவில்லை என கூறிய டிரம்ப் மச்சாடோ வெனிசுலாவின் தலைவராவது மிக கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.
அவர் நல்ல பெண் என்றாலும், அவருக்கு நாட்டுக்குள் ஆதரவோ மரியாதையோ இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க ராணுவத்தின் திறனை பாராட்டிய டிரம்ப், இந்தத் தாக்குதலில் வெனிசுவேலாவின் அனைத்து ராணுவத் திறன்களும் செயலற்றதாக்கப்பட்டதாக குறிப்பிட்டார். நேற்று அமெரிக்கா சாதித்ததை உலகில் எந்த நாடும் சாதித்திருக்க முடியாது என்றும் டிரம்ப் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு