கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை இரவு பரபரப்பைவும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான கடைசி போட்டியில் இலங்கையை 5 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.
ஆனால், பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டு ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது.

பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதிபெறுவதற்கு 64 ஓட்டங்களால் வெற்றி பெறவேண்டியிருந்தது.
ஆனால், பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் மொத்த எண்ணிகையை 148 ஓட்டங்களாக உயர்த்தியபோது பாகிஸ்தானின் அரை இறுதி கனவு கலைந்துபோனது.
இதனை அடுத்து குழு 2 இலிருந்து இரண்டாவது அணியாக நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இக் குழுவிலிருந்து ஏற்கனவே இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றிருந்தது.
குழு 1இல் தென் ஆபிரிக்கா ஏற்கனவே அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 01) நடைபெறவுள்ள சுப்பர் 8இல் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் விளையாட கடைசி அணியாக தகுதிபெறும்.
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 213 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் அணித் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை அண்மிக்கச் செய்தார்.
கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஷஹீன் ஷா அப்றிடி வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்து களை 4, 6, 6, 6ஆக விசுக்கிய தசுன் ஷானக்க 22 ஓட்டங்களைக் குவித்தார். 5ஆவது பந்து டொட் போலானது. கடைசிப் பந்து வைட் போன்று தென்பட்டபோதிலும் மத்தியஸ்தர் அசையவில்லை.
இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
பெத்தும் நிஸ்ஸன்க (3) இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்ததுடன் மொத்த எண்ணிக்கை 33 ஓட்டங்களாக இருந்தபோது கமில் மிஷார (26) களம் விட்டு வெளியேறினார்.

சரித் அசலன்கவும் பவன் ரத்நாயக்கவும் 3ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
ஆனால் அதன் பின்னர் சரித் அசலன்க (25), கமிந்து மெண்டிஸ் (3), ஜனித் லியனகே (5) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
இந் நிலையில் பவன் ரத்நாயக்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகமூட்டினர்.
பவன் ரத்நாயக்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 4 பவண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 58 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் தனித்து போராடிய தசுன் ஷானக்க அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 31 பந்துகளில் 2 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 76 ஓட்டங்ககளுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
தசுன் ஷானக்க பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் துனித் வெல்லாலகேவுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இதில் துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.
ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கைக்கு எதிராக அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
பங்களாதேஷின் சட்டாக்ரோமில் 2014இல் இங்கிலாந்து பெற்ற 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக ரி20 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட முந்தைய அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது
ஆரம்ப வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து பாகிஸ்தானுக்கு கணிசமான ஓட்டங்களைக் குவிக்க உதவினார்.
ஆரம்ப வீரர்களான சாஹிப்ஸதா பர்ஹான், பக்கார் ஸமான் ஆகிய இருவரும் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களையும் விளாசி அடித்து ஓட்டங்களை மிக இலகுவாக குவித்தனர்.

அவர்கள் இருவரும் 95 பந்துகளில் சாதனைமிகு 176 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இந்த வருட உலகக் கிண்ணத்தில் இது சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.
இதற்கு முன்னர் சென்னையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான குழுநிலை போட்டியில் நியூஸிலாந்தின் டிம் சீஃபேர்ட், ஃபின் அலன் ஆகியோர் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 175 ஓட்டங்களே முந்தைய அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
பக்கார் ஸமான் 42 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
விக்கெட் இழப்பின்றி 176 ஓட்டங்களைப் பெற்ற பலமான நிலையில் இருந்த பாகிஸ்தான் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்தது.
இதனிடையே திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சாஹிப்ஸதா பர்ஹான் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
60 ஓட்டங்களை எதிர்கொண்ட சாஹிப்ஸதா பர்ஹான் 9 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் சரியாக 100 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த வருட உலகக் கிண்ணத்தில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
நமிபியாவுக்கு எதிராக எஸ்எஸ்சி மைதானத்தில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் சாஹிப்ஸதா பர்ஹான் ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 33 ஓட்டங்களுக்க 3 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான்.
The post வெற்றியுடனும் ஏமாற்றத்துடனும் பாகிஸ்தான் நாடு திரும்புகிறது! appeared first on Vanakkam London.