த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் நடித்து உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) வெளியாகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்டரை ஆதரிப்பவரைப்போலக் காட்டப்படுவது ஏன்? இயக்குநர் ஞானவேல் சொல்வது என்ன?
‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ. ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வியாழக்கிழமையன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தவிர, ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
வேட்டையன் திரைப்படம் ரஜினியின் 170-வது திரைப்படம். இதற்கு முன்பாக அந்தா கானூன், கிராஃப்தார், ஹம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்த ரஜினியும் அமிதாப் பச்சனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அந்த ட்ரெய்லரில் காவல்துறையின் மோதல் மரணங்களுக்கு ஆதரவாகச் சில வசனங்கள் இடம்பெற்றிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. ஞானவேல் இதற்கு முன்பாக இயக்கிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிரான குரலாக வெளிப்பட்டது. இந்நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தில் இதுபோன்ற வசனங்கள் இடம்பெற்றிருப்பது, பலரது புருவங்களை உயர்த்தியது.
ஆனால், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலிடம் இது குறித்துக் கேட்டால், “படத்தைப் பார்த்துவிட்டு விமர்சித்தால் பரவாயில்லை. ட்ரைலரைப் பார்த்துவிட்டே கேள்விகேட்டால் எப்படி?” என்று கேட்டுச் சிரிக்கிறார். படம் வெளியாக இருக்கும் நிலையில், பெரும் பரபரப்பிற்கு இடையில் பிபிசியிடம் பேசினார் ஞானவேல்.
ஜெய் பீம் படத்தின் வெற்றி…
கேள்வி: ஜெய் பீம் படத்திற்குப் பிறகு நீங்கள் அடுத்த படத்திற்கென ஒரு கதையை வைத்திருந்திருப்பீர்கள். அந்தக் கதைக்குள் ரஜினி பொருந்தினாரா, அல்லது அவருக்கென ஒரு கதையை உருவாக்கினீர்களா?
பதில்: இந்தக் கதை ஏற்கனவே இருந்த கதைதான். ரஜினிகாந்திற்கு என உருவாக்கப்பட்ட கதையில்லை. ஆனால், இந்தக் கதையை ஒரு பெரிய நட்சத்திரம் செய்தால்தான் நன்றாக இருக்கும் என நினைத்திருந்தேன். ஜெய்பீம் படத்தில் சூர்யா நடித்திருந்ததால்தான், அந்தப் படம் மிகப் பெரிய அளவில் சென்று சேர்ந்தது. அறிமுகமில்லாத ஒரு கலைஞர் இடம்பெற்றிருந்தால், இவ்வளவு பெரிய அளவுக்கு அது வெற்றிப்படமாக மாறியிருக்குமா என்பதைச் சொல்ல முடியாது. அப்படி இருந்திருக்காது என்றுதான் நம்புகிறேன்.
அதேபோலத்தான் வேட்டையன் படத்தின் கதையை யோசித்தபோது, ஒரு பெரிய நட்சத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ரஜினிகாந்த் என யோசிக்கவில்லை. ரஜினிக்கென கதை வேண்டுமெனக் கேட்டபோது, இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது.
ஜெய் பீம் படத்தை இயக்கும்போது, ஏதாவது ஒரு அடையாளத்திற்குள் செல்ல வேண்டும் என்ற திட்டமிடலையெல்லாம் நான் வைத்துக்கொள்ளவில்லை. அப்படித் திட்டமிடவும் நான் விரும்பவில்லை. ஒரே மாதிரியான படங்களை எடுக்கக்கூடாது என்று மட்டும் நினைத்தேன். நமக்குப் பிடித்த கதையைச் சொல்ல வேண்டும். அது எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் சரி.
கேள்வி: ஜெய் பீம் திரைப்படம் காவல்துறையின் அத்து மீறல்கள் குறித்து கேள்வியெழுப்பிய ஒரு படமாக அமைந்தது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த அடையாளம் உங்களுக்கு வந்துவிட்டது…
பதில்: அதை நான் விரும்பித்தான் செய்தேன். மனித உரிமை மீறல் குறித்து குரல் எழுப்புவதுதான் அந்தப் படத்தின் நோக்கம். அதைத்தான் அந்தப் படம் செய்தது.
என்கவுன்டருக்கு ஆதரவா?
கேள்வி: ஜெய் பீம் படத்தில் காவல்துறையின் அடக்கு முறைக்கு எதிரான குரலாக ஒலித்த நீங்கள், இந்தப் படத்தில் என்கவுன்டருக்கு ஆதரவான குரலை ஒலிக்கச் செய்திருக்கிறீர்கள்… இது முரணாக இல்லையா?
பதில்: படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கலாம். ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு விமர்சித்தால் எப்படி? ட்ரெய்லருக்கே பதில் சொல்வதென்றால் எவ்வளவு பதில் சொல்வது?
படத்தைப் பாருங்கள், அதில் ஏதாவது விமர்சனம் இருந்தால் பேசலாம். இந்த விமர்சனத்திற்கான பதிலை நான் இப்போது சொல்ல முடியாது. அது படத்தின் கதை, பாத்திரங்கள் என எல்லாம் சம்பந்தப்பட்டது. உங்களுக்கு ஒரு முன்-தீர்மானத்தை ஏற்படுத்தும் விஷயங்களை நான் வெளிப்படுத்த முடியாது. உங்களுக்கு ஏன் அப்படித் தோன்றியது என்ற கேள்வியை நான் கேட்கப்போவதில்லை. படத்தைப் பாருங்கள். படத்தில் நிச்சயம் பதில் இருக்கும்.
இந்தப் படத்தின் கதையை ரஜினியிடம் சொல்லும்போது அவர் எப்படி எதிர்கொண்டார்.. பொதுவாக கதைகளைக் கேட்கும்போது அவர் எப்படி நடந்துகொள்வார்…
பதில்: ரஜினிகாந்திற்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்க வேண்டுமென்றால் மூன்று, நான்கு விஷயங்கள் அதற்குத் தேவை. முதலில், அவருடைய ரசிகர்களை அந்தக் கதை திருப்திப்படுத்துமா என்று பார்ப்பார். இரண்டாவதாக, பொதுவான ரசிகர்கள் இதனை ரசிப்பார்களா என்று பார்ப்பார்.
மூன்றாவதாக, இவ்வளவு பெரிய பொருட்செலவில் படத்தைத் தயாரிக்கும்போது, அந்தத் தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று பார்ப்பார். இதையெல்லாம் வைத்துத்தான் கதையை பிடித்திருக்கிறதா இல்லையா என்று தீர்மானிப்பார்.
கதை பிடித்திருக்கிறது என்றால், இதெல்லாம் அவரது மனதில் ஓட்டிப்பார்த்துதான் அவர் முடிவுசெய்திருக்கிறார் என்று அர்த்தம். இல்லாவிட்டால், கதை பிடித்திருக்கிறது, ஆனால் நான் அதில் நடிக்க முடியாது என்ற இடத்தை நோக்கி நகர்ந்துவிடும்.
வேட்டையனைப் பொறுத்தவரை, கதை அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அதனால்தான் ஏற்றுக்கொண்டார்.
‘செட்’டில் ரஜினி எப்படி நடந்துகொள்வார்?
கேள்வி: ஒரு இளம் இயக்குநராக கதையைச் சொல்லி, அவருக்கு படம் பிடித்திருக்கிறது. அதற்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது ரஜினிகாந்த் எப்படி நடந்துகொள்வார்?
பதில்: நான் இதுவரை இரண்டு படங்கள்தான் செய்திருக்கிறேன். அதில் ஒரு படம்தான் எனக்கான அடையாளம் என்று சொல்லக்கூடிய வகையில் வெற்றிபெற்றது.
ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரை, ஐம்பது ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். வெற்றிகரமாகவும் இருக்கிறார். ஒரு இயக்குநராக நான் போய் நின்றால், சார் என்றுதான் குறிப்பிடுவார்.
அவரைக் கண்டறிந்த பாலச்சந்தருக்கு என்ன மரியாதையோ, ஒரு இயக்குநராக வரும் எல்லோருக்கும் அதே மரியாதைதான். எந்த படிநிலையிலும் இயக்குநரின் முடிவுதான் இறுதியானது என்பதில் உறுதியாக இருப்பார். ஒரு இயக்குநரின் நடிகர் அவர்.
இதனை நான் முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்போது நேரிலேயே அனுபவித்தேன். அவர் மிகப்பெரிய நடிகர். ஒரு மணி நேரம் தாமதமாகக்கூட வரலாம். நாங்கள் அதற்கு தயாராகவே இருப்போம். ஆனால், அவர் அப்படி தாமதமாக வரமாட்டார்.
அதேபோல, ஆறு மணிக்கு ‘பேக் அப்’ ஆகிவிடலாம். அவருடைய வயதுக்கும் அனுபவத்திற்கும் அதை அவர் சொல்ல முடியும். ஆனால், ஒருபோதும் அவர் அப்படிச் சொல்ல மாட்டார். நாம் எப்போது சொல்கிறோமோ, அப்போதுதான் புறப்படுவார். அதுவரை, நான் எப்போது புறப்படலாம் எனக் கேட்க மாட்டார். இப்போது வரக்கூடிய சின்னச்சின்ன கலைஞர்கள்கூட, நான் சீக்கிரம் புறப்பட வேண்டும் என்பார்கள். இவர் ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை.
அதேபோல, ஷாட் முடிந்ததும் கேரவேனிற்குள் சென்று உட்கார மாட்டார். வெளியில்தான் அமர்ந்திருப்பார். ஷாட் ரெடியானவுடன் யாரும் சென்று அவரை அழைக்க வேண்டாம். அவரே வந்துவிடுவார். மற்றவர்களை நாம் கேரவேனுக்கு சென்று அழைத்துவர வேண்டும். அதற்கு பத்து நிமிடம் ஆகும். ஆனால், ரஜினியோ, அமிதாப்போ அப்படி ஒருபோதும் செய்ய மாட்டார்கள். இரண்டு பேருமே கேமராவுக்காக காத்திருப்பார்கள். இதெல்லாம் எனக்கு புது அனுபவமாக இருந்தது.
படப்பிடிப்பு நடக்கும்போது காட்சிகளை மாற்ற வேண்டும் என அவர் சொல்வதுண்டா…
பதில்: நான் துவக்கத்திலேயே முழு திரைக்கதையையும் வசனத்தையும் கொடுத்துவிடுவேன். காட்சிகளைப் பிரிப்பதுகூட அந்தக் கட்டத்திலேயே செய்திருப்பேன். ஆகவே, அவருக்கு எல்லாமே முதலிலேயே தெரிந்திருக்கும்.
சில சமயங்களில் காட்சியை மேம்படுத்துவது குறித்து அவருக்கு சில ஆலோசனைகள் வரலாம். எனக்கு ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில் நான் ஏற்றுக்கொள்வேன். ‘இல்லை சார், சரியாக வராது’ என்று சொன்னால், அதையும் ஏற்றுக்கொள்வார். இயக்குநரின் முடிவுதான் அவரைப் பொறுத்தவரை இறுதி முடிவு.
ரஜினி-அமிதாப் கூட்டணி
அமிதாப் பச்சனும் மிகப் பெரிய நட்சத்திரம். அவரை இயக்கும் அனுபவம் எப்படியிருந்தது…
பதில்: அமிதாப் – ரஜினி ஆகிய இருவரையும் இணைத்து இயக்கிய அனுபவம்தான் சிறப்பாக இருந்தது. இரண்டு பேரும் செட்டில் இருந்தாலே, செட் முழு உத்வேகத்துடன் இருக்கும். அதனை ஒரு ‘சர்ரியல்’ அனுபவம் என்றுகூட சொல்லலாம்.
என் கண் முன்னால்தான் நடக்கிறது. ஆனால், நாம்தான் இதனைச் செய்கிறோமா என்ற தருணத்தை அது எனக்குக் கொடுத்திருக்கிறது. ஒரு பிரேமுக்குள் இருவரும் இருந்தால், போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள்.
இவர் இருந்தால், அவர் நடிப்பது வேறு மாதிரி இருக்கும். அவர் இருந்தால் இவர் நடிப்பது வேறு மாதிரி இருக்கும். இரண்டையும் பார்ப்பதே மிகச் சிறப்பான அனுபவம். பாத்திரங்களுக்குத் தேவைப்படும் நடிப்பைத் தாண்டி, அவர்கள் சின்னச்சின்னதாக ஏதாவது செய்வார்கள்.
இருவரும் எப்படி இத்தனை ஆண்டுகளாக நீடித்திருக்கிறார்கள் என்பதை இதையெல்லாம் பார்க்கும்போதுதான் புரிந்தது.
ஏற்கனவே ரஜினிகாந்த் படத்தில் இருக்கும்போது, இதில் வருவதற்கு அமிதாப் பச்சன் எப்படி ஒப்புக்கொண்டார்?
பதில்: அவரை முதலில் அணுகும்போது, அவருடைய பாத்திரப் படைப்பு, ஸ்க்ரிப்ட் எல்லாவற்றையும் கொடுப்போம். அது பிடித்திருந்தால், நேரடியாகச் சந்திக்க அழைப்பார்கள். நேரில் சந்திக்கும்போது அவர் ஏன் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்று அவரை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.
அப்படித்தான் இதிலும் நடந்தது. ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்விதான் அவருக்கு. அதை வெளிப்படையாகவே கேட்பார்கள். அதற்கு சரியான பதிலைச் சொல்ல வேண்டும். கதையையும் பாத்திரத்தையும் சொன்ன பிறகு ஏற்றுக்கொண்டு, உள்ளே வந்தார்.
இந்தப் படத்தில் அமிதாப் தவிர, ராணா டகுபதி, ஃபகத் பாஸில், கிஷோர் என வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் இருக்கிறார்கள். சமீபகாலமாக வெளிவரும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில், அகில இந்திய சந்தையை மனதில் வைத்து, எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய நட்சத்திரங்களை படத்தில் இணைக்கிறார்கள். இந்தப் படமும் அந்தப் போக்கின் தொடர்ச்சியா?
பதில்: நிச்சயமாக இல்லை. கதைக்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் கதையை எழுதும்போதே, இவர்களை மனதில் வைத்துத்தான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு பாத்திரத்தையும் இந்த நடிகர்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துத்தான் உருவாக்கினேன். படம் பார்க்கும்போது அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். இத்தனை கதாநாயகிகள் இருப்பதற்கும் அதுதான் காரணம்.
‘பெரிய பட்ஜெட்’ படம்
இவ்வளவு பெரிய பட்ஜெட்டிற்கு தயாரிப்பு நிறுவனம் எப்படி ஒப்புக்கொண்டது?
பதில்: இவ்வளவு பெரிய நடிகர்களைக் கொண்டுவருவதற்கு, தயாரிப்பு நிறுவனம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் கதையை எழுதும்போது இப்படி நடிகர்களை நான் யோசிக்கவே முடியும்.
கதையைச் சொல்லி அமிதாப்பச்சனை நடிக்க ஒப்புக்கொள்ள வைக்கலாம். ஆனால், அவருக்கான ஊதியம் உள்ளிட்டவற்றைக் கொடுக்கும் அளவுக்கு தயாரிப்பு நிறுவனம் இருக்க வேண்டும்.
சுபாஷ்கரனிடம் கதையைச் சொல்லிவிட்டு, இந்தெந்த நடிகர்கள் எல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவர் உடனே அதற்கு ஒப்புக்கொண்டார். இத்தனை நடிகர்கள் வேண்டுமெனச் சொன்னதும் அவர்களிடம் பேசி, ஒப்புக்கொள்ள வைக்க வேண்டியது தயாரிப்பு நிறுவனத்தின் வேலை. அதைச் சிறப்பாக செய்துகொடுத்தார்கள்.
கிருத்திகா யார்?
திரைக்கதை ஆசிரியரான கிருத்திகா யார்?
பதில்: என்னுடைய மனைவிதான் அவர். ஜெய் பீம் படத்திலும் அவருடைய பெயர் இருந்தது. அதில் ஏன் யாரும் கவனிக்கவில்லை, இதில் எப்படி கவனித்தார்கள் என்பது புரியவில்லை. ஒரு பெண்ணின் நோக்கில் கதையை அணுகுகிறார். அது உதவியாக இருக்கிறது. திரைக்கதை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே இணைந்துதான் பணியாற்றுகிறோம்.
ஒரு இயக்குநருக்கு ஒவ்வொரு படமும் அவர்கள் ஆளுமையின் ஒரு பகுதியாகிவிடுகிறது. உங்களுக்கு ஜெய் பீம் ஒரு அடையாளத்தைத் தந்திருக்கிறது. வேட்டையன் வேறு ஒரு அடையாளத்தைக் கொண்ட படமாக இந்தத் தருணத்தில் தோன்றுகிறது. நீங்கள் எந்த அடையாளத்தை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்…
பதில்: இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்தத் தருணத்தில் இதற்கு மேல் இதைப் பற்றி ஏதாவது சொன்னால், அந்தப் படம் குறித்த ஆர்வம் தணிந்துவிடலாம். அல்லது முன்முடிவோடு படத்தைப் பார்க்க வரலாம்.
அப்படியிருக்கக்கூடாது என விரும்புகிறேன். நல்ல திரைக்கதையுடன் கூடிய, ரஜினி, அமிதாப், ஃபகத் ஃபாஸில் நடித்த படத்தைப் பார்க்க வருகிறோம் என்ற எண்ணத்துடன் நீங்கள் படத்தை அணுகுங்கள். அதைத் தாண்டி வேறு ஏதாவது சொன்னால், அந்தப் படம் தரும் அனுபவம் இல்லாமல் போய்விடலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.