காட்பாடி: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர், தாராபடவேடு, வண்டரந்தாங்கல் ஆகிய ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாலாற்றில் செல்லும் தண்ணீர் ஏரி, குளம், குட்டைகளுக்குத் திருப்பி விடப்படுவதால் வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. காட்பாடி கழிஞ்சூர் ஏரியும் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக காட்பாடியில் அதிகபட்சமாக 71 மி.மீட்டர் மழைப் பதிவாகியிருந்தது. காட்பாடி கழிஞ்சூர் ஏரி, தாராப்படவேடு ஏரி, வண்டரந்தாங்கல் ஏரி என மூன்று ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
உபரிநீர் வெளியேற போதிய கால்வாய் வசதி இல்லாததால் பாலாஜி நகர், பேங்க் நகர், அண்ணாமலை நகர், மதிநகர், கோபாலகிருஷ்ணன் நகர், மதிநகர் விரிவு சாலை, அருப்புமேடு உள் ளிட்ட பகுதிகளை மழை வெள்ளம் நேற்று காலை சூழ்ந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவ னங்களுக்குள் தண்ணீர் புகுந்த தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மதிநகர் செல்லும் பிரதான சாலை முழு வதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. கழிஞ்சூர் ஏரி கால்வாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் பாரதி நகர் பிரதான சாலை பகுதிகளில் முழங்கால் அளவுக்குச் சென்றதுடன், அப்பகுதியில் உள்ள வீடு களையும் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்களும் கடும் அவதிக் குள்ளாகினர்.
இதையடுத்து, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி வட்டாட்சியர் ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மழைநீரை வெளியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்தினர். பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு மழை வெள்ளம் கால்வாய் வழியாகச் செல்ல ஏற் பாடுகள் செய்யப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “கனமழை பெய்யும் போதெல்லாம் இது போன்ற பாதிப்பு இப்பகுதியில் நீடிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். ஏரி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டால் குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் கடும் அவதிக்குள்ளாகிறோம்.
இதுகுறித்து பலமுறை அதி காரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனி யேனும் இப்பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றனர். இந்நிலையில், கழிஞ்சூர் ஏரி மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாயை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவ இடத்தில் வெள்ள தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற் கொண்டு வருகின்றனர்.
ரூ.20 கோடி நிதி: இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘வண்டரந் தாங்கல், தாராபடவேடு, கழிஞ்சூர் ஆகிய மூன்று ஏரிகள் நிரம்பி யதாலும், நேற்று முன்தினம் இரவு காட்பாடி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை காரணமாகவும் உபரிநீர் தெருக்களுக்குள் செல்கிறது.
தண்ணீர் குடியிருப்புகளுக்குள் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை வைத்துத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நீர் செல்லும்கால் வாயை அகலப்படுத்த 5 பொக் லைன் இயந்திரங்களுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே உள்ள கால்வாய் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பாதிப்பு ஏற் படாமல் இருக்க ரூ.20 கோடி நிதியில் பணிகள் விரைவில் மேற் கொள்ளப்படும்’’ என்றனர்.