வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வேலூர் அடுத்த ரங்காபுரத்தை யொட்டியுள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் என்ற இடத்தில் 500 அடி உயர தீர்த்தகிரி மலை உள்ளது. இந்த மலையில் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
இந்த கோயில் முன்பு 92 அடி உயரத்தில் உலகிலேயே 3-வது உயரமுள்ள மிகப்பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்வடக்கு திசையை நோக்கியவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலையின் உச்சியில் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. தற்போது திருப்பணிகள் முடிந்து கோயில் மற்றும் 92 அடி உயரமுள்ள முருகன் சிலை பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை காலை முதலாவது யாக பூஜைகள் தொடங்கின. இதையடுத்து, நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விமானம், மூலவர் கோபுரங்கள், பரிவார தேவதைகளுக்கும், காலை 10.15 மணியளவில் தீர்த்தகிரி வடிவேல் முருகன் மற்றும் 92 அடி உயர முருகன் சிலைக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு) ப.கார்த்திகேயன் (வேலூர்) மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை அரோகரா முழக்கத்தோடு தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு 7 மணியளவில் வாண வேடிக்கையும், மகா அபிஷேகம் அலங்கார தரிசனமும், திருக்கல்யாண வைபவமும், பின்னர் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை குழுவினரின இசை கச்சேரியும் நடைபெற்றது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், அறங்காவலர் குழு துணைத்தலைவர் ஏழுமலை மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.