புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸின் பணிகள் என்பது தமிழ் நல்லுலகத்துக்கு மிகப்பெரிய சான்று மற்றும் சாட்சியாக இருந்துள்ளது.
பாமக, வடமாவட்டங்களில் உழைக்கும் வர்க்கங்களான வன்னியர், பட்டியலின மக்களை இணைத்து களமாடியிருந்தால் வீழ்ச்சிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்காது. தற்போது உட்கட்சி விவகாரத்தில் மருத்துவர்ராமதாஸ் கண் கலங்கியிருப்பது வருத்தத்துக்குரிய ஒன்றுதான். இதற்கான விளக்கத்தை அன்புமணிதான் கூற வேண்டும்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கன்னடத்துக்கு மூத்த மொழி தமிழ் என்று கூறியுள்ளார். தமிழ் மீதுள்ள ஆழ்ந்த புரிதலை அவர் வெளிகாட்டியுள்ளார். அவர் இவ்வாறு பேசியதால், கன்னடத்தில் கமல் நடித்த தமிழ்ப் படத்தை திரையிடமாட்டோம் என கன்னடர்கள் கூறுவது சரியில்லை. இது இரு மாநில பிரச்சினையாக மாறிவிடக்கூடாது.
மதிமுக இதுவரையிலும் திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் நூற்றாண்டுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் தமிழர்களின் ஜீவதார உரிமை மற்றும் நமது தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
அவரது குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போவதில்லை என்பது எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அமெரிக்கா செனட் சபைகளில் ஒலித்த அவரது குரல் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்குமேயானால் தமிழர்கள், தமிழ் ஈழ உறவுகள், தமிழகத்தின் ஜீவாதாரத்துக்காக மட்டுமே ஒலிக்கும்.
வைகோவின் குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மதிமுக மற்றும் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்கப்பட்டது குறித்து கடந்த மக்களவைத்தேர்தலின் போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
எனவே திமுகவின் நடவடிக்கையில் நாங்கள் குறை காணவில்லை. எங்கள் தலைவருக்கு கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தனிப்பட்ட முறையில் வருத்தம் இருந்தாலும் கட்சி நலன் சார்ந்து முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தை ஆக்டோபஸ் கரம் கொண்டு அழிக்க வருகின்ற மதவாத பாசிச சக்திகளை எதிர்த்துதான் இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது.
‘திராவிட இயக்கத்தின் அழுத்தமான சிந்தனைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது’ என்று எங்கள் தலைவர் கூறியுள்ளார். ஜூன் 22-ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள கட்சி பொதுக்குழு கூட்டத்தில் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி பேசி, முடிவெடுக்கப்பட்டு, முறையாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.