வொர்க் ஃப்ரம் ஹோம் மோடிலேயே கட்சி நடத்துகிறார் என விஜய்யை அவரைப் பிடிக்காதவர்கள் கிண்டலடித்த நிலையில், அந்த அவச்சொல்லை போக்குவதற்காக களத்துக்கு வந்து மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட ஆரம்பித்துவிட்டார்கள் தவெக தொண்டர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக-வும் பாஜக-வும் போட்டி போட்டுக் கொண்டு திமுக அரசுக்கு எதிரான பிரச்சினைகளை கையிலெடுத்து வாள் சுழற்றி வருகின்றன. இந்தச் சூழலில், “அடுத்த 60 வாரங்களுக்கு விஜய் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கப் போகிறார். அவர் மக்களோடு மக்களாக களத்துக்கு வரப் போகிறார்” என்றெல்லாம் தவெக தரப்பில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்து வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக அதிமுக, பாஜக-வுக்கு போட்டியாக தவெக-வினரும் மக்கள் பிரச்சினைகளுக்காக களத்துக்கு வந்திருக்கிறார்கள்.
சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகள், மக்களைப் பாதிக்கும் அம்சங்களை கணக்கெடுத்து வரும் தவெக-வினர், அந்தப் பிரச்சினைகளுக்காக மக்களைத் திரட்டி போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
அதன்படி, கோவை தெற்கு மாவட்ட தவெக-வினர் கோவை மக்களுக்கு தீராத தலைவலியாகிப் போன வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரத்துக்காக பெரும் கூட்டத்தை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். அதேபோல் கோவை மாநகர் மாவட்ட தவெக நிர்வாகிகள் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக வாரம் தோறும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்களை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கோவை தெற்கு மாவட்ட தவெக செயலாளர் கே.விக்னேஷிடம் பேச்சுக்கொடுத்தோம். “மக்களுக்கு நல்லது செய்வோம்னு சொல்லி அரசியல் கட்சியை தொடங்கிவிட்டோம். இனி நமது வேலை அனைத்துமே மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அதை தீர்க்க பாடுபடுவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என எங்கள் தலைவர் தளபதி விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், மக்களின் அடிப்படை தேவைகள், பிரச்சினைகளுக்காக அதிகாரிகளைச் சந்தித்து மனுக்களை அளித்து வருகிறோம். தேவைப்பட்டால் போராட்டங்களையும் நடத்த ஆரம்பித்திருக்கிறோம். மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கிடைப்பதிலேயே நிறைய குறைபாடுகள் உள்ளது.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரம், வீடற்றவர்களுக்கு அரசு வீடுகள் கட்டித் தருதல், சாலை வசதி போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதிலெல்லாம் திமுக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. அதனால் மக்கள் எங்களைத் தேடி வருகின்றனர். நாங்கள் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அதற்கான தீர்வு கிடைக்கும் வரை விடமாட்டோம். அந்த நம்பிக்கை இருப்பதால் தான் மக்கள் எங்களிடம் வருகிறார்கள்” என்று சொன்னார் அவர்.
தவெக-வின் திடீர் போராட்டங்கள் குறித்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரான நா.கார்த்திக் நம்மிடம் பேசுகையில், “விஜய் கட்சியினர் இப்போதுதான் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் நாங்கள், எங்கள் வாழ்க்கையையே பொதுவாழ்க்கைக்காக அர்ப்பணித்தவர்கள். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாங்கள் சமரசம் இல்லாமல் பணி செய்பவர்கள்.
கோவையில், செம்மொழிப் பூங்கா, கலைஞர் நூலகம், மேற்கு புறவழிச்சாலை, அவிநாசி சாலை உயர்மட்டப் பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பில்லூர் 3 உள்ளிட்ட பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களை தந்துள்ளோம். மாநகரில் ரூ.400 கோடி மதிப்பில் சாலைகள் போடப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட, மாநகர சாலை சீரமைப்புக்காக முதல்வர் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளார்.
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயோ-மைனிங் திட்டம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. இப்படி அனைத்து விஷயத்திலும் நாங்கள் மக்களோடு மக்களாக களத்தில் நின்று பணி செய்து வருகிறோம். தவெக-வினர் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் அரசியலுக்காகவும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்திப் பார்க்கிறார்கள்” என்றார். நாரதரின் கலகத்தைப் போல தவெக தம்பிமார்கள் நடத்தும் போராட்டங்களும் மக்களுக்கு நன்மையில் முடிந்தால் சரிதான்!