போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் வழங்கிய தகவலுக்கு அமைய, நடிகர் கிருஷ்ணா பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா, நேற்று (25) பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பொலிஸ் விசாரணையில் நடிகர் கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலத்தில்,
“நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நல்ல நண்பர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். ஆனால், என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது தவறான தகவல்.
நான் போதைப்பொருள் உட்கொள்ள முடியாது. போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இரைப்பை அழற்சி நோய் இருக்கிறது. இதயத் துடிப்பு பிரச்சனையும் உள்ளது. அதனால் நான் போதைப் பொருள் எடுத்துக்கொள்ள முடியாது.
என்னை பற்றி வந்த தவறான தகவல்களை மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொலிஸார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. நடிகர் கிருஷ்ணா வீட்டில் அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக பொலிஸார் எடுத்து சென்றனர்.
இதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்துவோர் பட்டியலில் இளம் இசையமைப்பாளர் உள்ளிட்ட பிரபல முன்னணி 10 நடிகர்-நடிகைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இதற்காக உதவி கமிஷனர் ஒருவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
The post ஸ்ரீகாந்தால் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா! appeared first on Vanakkam London.