ஹரியாணா மாநில வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தாம் வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தனர். மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துவரும் பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டுள்ள அலை குறித்துப் பேசி வந்த வல்லுநர்கள், இந்தத் தேர்தலில் காங்கிரஸை விட பா.ஜ.க பலவீனமாக இருக்கிறது என்றும், காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் கூறி வந்தனர்.
இது தவிர, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறின. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் 60 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹரியாணாவில் விவசாயிகளின் பிரச்னை, ‘அக்னிவீர்’ திட்டம் ஆகியவற்றால் மக்கள் பா.ஜ.க அரசின் மீது கோபமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் இன்று (அக்டோபர் 8) வெளிவந்த தேர்தல் முடிவுகள், அரசியல் வல்லுநர்கள் முதல் கருத்துக்கணிப்புகள் வரை அனைத்தையும் பொய்யாக்கியிருக்கின்றன.
அதுமட்டுமின்றி ஹரியாணாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம் எனக் காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?
மூத்த பத்திரிக்கையாளர் ஹேமந்த் அத்ரி, இந்த முடிவுகளுக்கு பாஜகவின் நுண் நிர்வாகம் (micro management) மிகப்பெரிய காரணம் என்கிறார்.
ஜாட் சமூகத்தினர் அல்லாதவர்களின் வாக்குகளை பா.ஜ.க மிகவும் சாமர்த்தியமாக நிர்வகித்தது என்கிறார் அவர்.
1. ஜாட் vs பிற சமூகத்தினர்
ஹரியாணாவைச் சேர்ந்த அரசியல் வல்லுநர்கள், பொதுமக்கள், கருத்துக் கணிப்புகள் என அனைவரிடமும் காங்கிரசுக்கு ஆதரவான கருத்துக்களே இருந்தன என்கிறார் ஹேமந்த் அத்ரி.
ஆனால் பா.ஜ.க-வின் ‘நுண் நிர்வாகம்’ தேர்தல் முடிவுகளை மாற்றியது, என்கிறார்.
ஹரியாணா அரசியலைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வரும் மூத்த பத்திரிக்கையாளர் ஆதேஷ் ராவல், ஹரியாணாவில் 22% ஜாட் வாக்குகள் உள்ளன, என்கிறார். அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறுகிறார்கள் என்கிறார்.
“காங்கிரஸ் வெற்றி பெற்றால், பூபிந்தர் சிங் ஹூடா ஹரியாணா முதல்வராக பதவியேற்பார் என்று ஜாட் அல்லாதவர்கள் கருதினர், எனவே அவர்கள் அமைதியாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்,” என்கிறார்.
மேலும் பேசிய ஆதேஷ் ராவல், “இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஜாட் மற்றும் பிற சமூகம் என வாக்குகள் பிரிந்தது. அதன் காரணமாக காங்கிரஸ் நேரடி இழப்பை சந்தித்துள்ளது,” என்கிறார்
ஜாட் மற்றும் ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளைச் சமநிலைப்படுத்துவதில் பா.ஜ.க பல இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலத்தின் பல தொகுதிகளில் கடுமையான போட்டியின் மூலம் காங்கிரசை தோற்கடித்துள்ளது, என்கிறார்.
பல தொகுதிகளில் காங்கிரஸ் மிக நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
2. கோஷ்டி பூசல்
ஹரியாணாவில் காங்கிரசின் தோல்விக்குக் கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
பூபிந்தர் சிங் ஹூடாவின் முகாமைச் சேர்ந்தவர் யார், குமாரி செல்ஜாவுக்கு நெருக்கமானவர்கள் யார் என்ற கோணத்திலும் ஹரியாணா காங்கிரஸ் வேட்பாளர்கள் பார்க்கப்பட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஹரியாணாவில் கோஷ்டிப் பூசல், தவறான தொகுதி ஒதுக்கீடு காரணமாக காங்கிரஸ் சுமார் 13 தொகுதிகளி இழந்துள்ளதாக ஹேமந்த் அட்ரி கூறுகிறார். இதில் பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா மற்றும் காங்கிரஸ் மேலிடத்தின் தேர்வு வேட்பாளர்களும் அடங்குவர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா தொடர்பாகப் பல வகையான விவாதங்கள் தொடர்ந்தன. காங்கிரஸ் தலைவர்கள் பலர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே முதல்வர் பதவியில் அதிக கவனம் செலுத்தியதாகக் கூட கூறப்படுகிறது.
அதீத தன்னம்பிக்கையோடு இருக்கக்கூடாது என்பதே இந்தத் தேர்தல்களின் மிகப்பெரிய பாடம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஹரியாணாவில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி பற்றிப் பேசப்பட்டது, ஆனால் இருவருக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை.
3. தொகுதிப் பகிர்வு
இந்த முறை ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் பா.ஜ.க தனது வேட்பாளர்களை மாற்றியது. இதில் 16 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பா.ஜ.க 27 பழைய தொகுதிகளை தக்க வைத்துக்கொண்டு, சுமார் 22 புதிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஹேமந்த் அத்ரி, “காங்கிரஸ் அதன் எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பளித்தது. அதில் பலர் தோற்றனர். வேட்பாளர்களை மாற்றாததும் காங்கிரஸூக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க 90 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, அதில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை பா.ஜ.க 89 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியது. 2019-இல் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 31 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஹரியாணாவில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 43% வாக்குகளையும், பா.ஜ.க 46% வாக்குகளையும் பெற்றன. அதாவது இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்தது.
4. விலகிய தலித் வாக்காளர்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி, மக்களவைத் தேர்தலில் தலித் வாக்குகளில் பெரும்பகுதி காங்கிரஸூக்குப் போனது. ஆனால் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இந்த வாக்கு காங்கிரஸிடமிருந்து விலகிச் சென்றதாக தெரிகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 1% வாக்குகளை மட்டுமே பெற்றது.இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுமட்டுமின்றி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட, இம்முறை, ஆம் ஆத்மி கட்சி, மாநிலத்தில் தனது ஓட்டு வங்கியை சுமார் 1% அதிகரித்துள்ளது.
உதாரணமாக, மாநிலத்தின் அசந்த் சட்டமன்றத் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை விட 2,300 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். அதேசமயம் இந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 27,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த இடத்திற்கான அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் உள்ள தலித்துகள் காங்கிரசுக்கு வாக்களித்தனர். மூன்றே மாதங்களில் தலித் வாக்குகள் விலகியது ஏன் என்று காங்கிரஸ் சிந்திக்க வேண்டும் என்று ஆதேஷ் ராவல் கூறுகிறார்.
வாக்கு வித்தியாசம்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்குச் சிறிய கட்சிகள் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் முக்கிய காரணம்.
ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சியால் எந்த ஒரு அதிசயமும் செய்ய முடியவில்லை அல்லது எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் பிரிந்ததால் காங்கிரஸ் இழப்பைக் கண்டது.
காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகள் குறைவாக இருந்த தொகுதிகளிலும், தங்கள் வெற்றி தெளிவாக இல்லாத தொகுதிகளிலும் காங்கிரஸூக்கு எதிரான வேட்பாளருக்கு பா.ஜ.க உதவியது என ஹேமந்த் அட்ரி கூறுகிறார்.
உதாரணமாக, தாத்ரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸை விட 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றது. இந்த இடத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த சஞ்சய் சபாரியா 3,713 வாக்குகள் பெற்றார். இது தவிர இரண்டு வேட்பாளர்கள் இந்த வெற்றி வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளனர்.
சஃபிதான் தொகுதியின் நிலையும் இதுதான். காங்கிரஸூடன் ஒப்பிடும்போது பா.ஜ.க-வின் வெற்றி வித்தியாசம் சுமார் 4,000 வாக்குகள், மூன்றாவது இடத்தில் இருந்த சுயேச்சை வேட்பாளர் 20,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
ஃபதேஹாபாத் தொகுதியில், காங்கிரசை விட பா.ஜ.க 2,252 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளது. மற்ற நான்கு வேட்பாளர்கள் 2,500 முதல் 10,000 வாக்குகள் வரை பெற்றனர்.