15
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இதில், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, உலகின் மிக முக்கியமான இந்தக் கப்பல் போக்குவரத்து பாதையில் சுமார் 95% போக்குவரத்து குறைந்துள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்த நீரிணையைத் திறப்பது அவசியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் இந்த நீநீரிணையைத் தடுத்துள்ளது. உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பொதுவாக இந்த வழியாகவே செல்கிறது.
இந்த நெருக்கடியால் உலகளாவிய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை 45% உயர்ந்து ஒரு பீப்பாய் $106ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் போரினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு பாதிப்புகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதிக்க பிரதமர் ஸ்டார்மர் தலைமையில் இன்று திங்கட்கிழமை (23) ‘கோப்ரா’ (Cobra) அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நீரிணை 48 மணி நேரத்திற்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை “அழித்துவிடுவேன்” (obliterate) என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால், வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி நிலையங்களைத் தாக்குவோம் என்று ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள கூட்டு அமெரிக்க-இங்கிலாந்து இராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் இரண்டு ஏவுகணைகளை வீசியதாகவும், அதில் ஒன்று இடைமறிக்கப்பட்ட நிலையில் மற்றொன்று இலக்கை அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, ஹார்முஸ் நீரிணையை இலக்காகக் கொண்டு ஈரானிய தளங்கள் மீது தாக்குதல் நடத்த, இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, இங்கிலாந்து நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே இந்தத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும், எரிசக்தி விலையேற்றத்தால் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவ £53 மில்லியன் நிதியுதவித் திட்டத்தை இங்கிலாந்து அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது.