0
இலங்கை அலைச்சறுக்கு சம்மேளனம் (SFSL) ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அலைச்சறுக்கு போட்டி 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஹிக்கடுவை ‘மெயின் பொயின்ட்’ (Hikkaduwa Main Point) இல் நடைபெற்றது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினால் ஒத்திவைக்கப்பட்ட இப்போட்டியை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர்.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே,
இலங்கையை உலகத்தரம் வாய்ந்த நீர் விளையாட்டு மையமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் தூரநோக்கை விளக்கினார். இலங்கையில் அலைச்சறுக்கு விளையாட்டை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமைச்சகம் தொடர்ச்சியாக வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
இப்போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இரண்டு இளம் அலைச்சறுக்கு வீரர்களுக்கு சர்வதேச பயிற்சித் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளுக்கான முழுமையான அனுசரணையை அமைச்சகம் வழங்கும் என்றும், விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டில் SFSL உடன் இணைந்து பல சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“அலைச்சறுக்கு என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, இது பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு முக்கிய தேசிய விளையாட்டு,” என்று குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை வீரர்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்க அமைச்சகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.










