பட மூலாதாரம், Getty Images
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில், மிக உயர்ந்த பதவியில் இருந்த தலைவராக ஹொசைன் சலாமி கருதப்படுகிறார்.
65 வயதான சலாமி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இரானின் எதிரி நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை முன்னெடுத்ததற்காக அறியப்பட்டவர்.
இந்த இரு நாடுகளில் எந்த ஒரு நாடும் தாக்குதல் நடத்தினால், “இரான் நரகத்தின் வாயில்களைத் திறக்கும்” என கடந்த மாதம் அவர் கடுமையாக எச்சரித்திருந்தார்.
அமெரிக்கா – இரான் இடையே அணு ஆயுத பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்க கூடாது என தனது கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தபோதிலும், இரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அமெரிக்கா கூறினாலும், இத்தாக்குதல்களுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் “பெரிய விலை” கொடுக்க நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது.
இதனால் ஏற்கனவே பதற்றமாக உள்ள மத்திய கிழக்கு பகுதியில் முழுமையான போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இரான் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியான முகமது பாகேரி, துணைத் தளபதி கோலமாலி ரஷீத் மற்றும் பல அணு விஞ்ஞானிகளும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்பு, “எந்தவொரு சூழ்நிலைகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இரான் முழுமையாக தயாராக உள்ளது” என்று சலாமி கூறியிருந்தார்.
“இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் இருக்கும் எதிர்த்து சண்டையிட ஆயுதமோ, உதவியோ இல்லாத பாலத்தீனியர்களுடன் போராடுவது போல், இரானையும் எதிர்த்துப் போராட முடியும் என்று எதிரி நினைக்கிறார்,” என்று கூறிய அவர், “நாங்கள் போரால் சோதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்”என்று குறிப்பிட்டார்.
1980 ஆம் ஆண்டில், இரான் – இராக் போரின் போது, இரானிய ஆயுதப் படைகளின் சக்திவாய்ந்த கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் இணைந்தவர் சலாமி.
2009 ஆம் ஆண்டில் துணைத் தளபதி ஆன அவர், அதன் பிறகு ஒரு தசாப்தம் கழித்து தளபதி ஆக உயர்ந்தார்.
இரானின் அணுசக்தி மற்றும் ராணுவ திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்காவால் அவருக்கு 2000-ஆம் ஆண்டுகளில் இருந்து தடை விதிக்கப்பட்டது.
இரானின் ராணுவத் திறன்களைப் பற்றி பெருமையாகப் பேசிய சலாமி, ஒரு கட்டத்தில், இரான் “உலகப் பேரரசாக மாறும் வேளை வந்துவிட்டது” என்று அறிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான ராணுவ மோதல் நடப்பதற்கான வாய்ப்பை சலாமி வரவேற்றார்.
2019ம் ஆண்டில், சிரியாவில் இரானிய இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலாக, சலாமி அரசியல் வரைபடத்திலிருந்து “சியோனிச ஆட்சியை முற்றிலும் நீக்குவதாக” சபதம் எடுத்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியாவில் உள்ள இரானிய தூதரகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், இரண்டு ஜெனரல்கள் உட்பட ஏழு புரட்சிகர காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, “எங்கள் துணிச்சல் மிக்க வீரர்கள் சியோனிச ஆட்சியை தண்டிப்பார்கள்” என்று சலாமி இதேபோல் மற்றொரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
1979 இல் இரானில் நடந்த புரட்சிக்கு முன்பு வரை, இரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. அந்த புரட்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஆட்சி, இஸ்ரேலை எதிர்ப்பதை அதன் கொள்கையின் முக்கிய அங்கமாக எடுத்துக் கொண்டது.
இஸ்ரேல் எனும் நாட்டை தற்போதைய இரானிய ஆட்சி ஏற்கவில்லை.
இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா காமனெயி, இஸ்ரேலை “புற்றுநோய் கட்டி” என வர்ணித்து, அது “சந்தேகத்திற்கு இடமின்றி பிடுங்கி அழிக்கப்படும்” என்று கூறினார்.
இரான் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், இஸ்ரேலுக்குக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் கருதுகிறது..
சலாமியும் புரட்சிகரக் காவல் படையின் பிற மூத்த அதிகாரிகளும் இரானின் அதி உயர் தலைவருக்கு ஆலோசனை வழங்குவது வழக்கம்.
பட மூலாதாரம், Getty Images
இரானின் புரட்சிகர காவல்படை என்றால் என்ன?
இரானின் மதத் தலைவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய புரட்சிக் காவல் படையை (IRGC) நிறுவினார்.
நாட்டின் இஸ்லாமிய முறையை பாதுகாப்பதும், வழக்கமான ராணுவத்துக்கு எதிராக ஒரு சமநிலையை பேணுவதும் அதன் நோக்கமாக உள்ளன. ஏனெனில் அவர்கள் ராணுவ படைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. 190,000 க்கும் அதிகமான வீரர்களுடன், அதன் சொந்த தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையை கொண்டுள்ளது புரட்சிகர காவல் படை.
இரானின் மிகவும் சக்திவாய்ந்த அப்படை, மிகவும் வலிமையான , ராணுவ மற்றும் அரசியல் குழுக்களில் ஒன்றாக உள்ளது.
இரானின் ராணுவம், அந்நாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஆட்சியைப் பாதுகாக்க புரட்சிகர காவல் படை அமைக்கப்பட்டது.
இப்படை நேரடியாக அதி உயர் தலைவரிடம் தனது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதால், அதன் அதிகாரம் மற்ற அமைப்புகளால் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டது.
இரானின் முக்கிய ஆயுதங்களை கண்காணிக்கும் புரட்சிகர காவல் படை, துணை ராணுவமான பாசிஜ் எதிர்ப்புப் படையை கட்டுப்படுத்துகிறது. அப்படை பெரும்பாலும் உள்நாட்டு எதிர்ப்பை அடக்க பயன்படுத்தப்படுகிறது.
மத்திய கிழக்கின் பிற பகுதிகளில், இந்த குழு தங்கள் கூட்டாளிகளாக உள்ள அரசுகளை ஆதரிக்க பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கி, தங்களது செல்வாக்கை நிலைநாட்டுகிறது.
புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள், அதன் ரகசிய வெளிநாட்டுப் பிரிவான ‘குட்ஸ் படையை’ இயக்குகிறார்கள்.
இந்தப் பிரிவு ஆப்கானிஸ்தான், இராக், லெபனான், பாலத்தீனிய பிரதேசங்கள் மற்றும் யேமேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையதாய் உள்ளது.
அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரசியல் அமைப்புகளில் அதிகாரம் வாய்ந்த பதவிகளில், முன்னாள் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்தவர்கள் இன்றும் பதவி வகிக்கின்றனர்.
இவர்களில் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் மற்றும் முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் உள்ளனர்.
கோ ஈவ் மற்றும் ரஃபி பெர்க் ஆகியோர் கூடுதல் தகவல்கள் வழங்கியுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு