13
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதாக ஈரானியப் புரட்சிப்படைத் தளபதி அறிவித்துள்ளார். நீரிணையை கடக்க முயலும் கப்பல்கள் தாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த 28 பிப்ரவரி முதல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஈரான் வெளியிட்டுள்ள மிகத் திறந்த மற்றும் கடுமையான மிரட்டல்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற நாடுகள் தங்களின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்காக இந்நீரிணையை பெரிதும் நம்பியுள்ளன.
மேலும், இந்த நீரிணையை சார்ந்த சில நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்களும் அமைந்துள்ள நிலையில், அவற்றை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில் கச்சா எண்ணெயை ஏற்றிச்செல்லும் கப்பல்களின் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு வட்டாரத்திலிருந்து சீனா நோக்கிச் செல்லும் பெரிய எண்ணெய் கப்பலுக்கான தினசரி கட்டணம் 400,000 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 27 பிப்ரவரி நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இந்த கட்டணம் இருமடங்காக அதிகரித்துள்ளது.