திருநெல்வேலி: “கடந்த 10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது. தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக கூறி, தமிழக அரசைக் கண்டித்து அமமுக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது.
திருநெல்வேலியில் அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும். வரும் சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக அமையும். தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்” என்று அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அமமுக துணை பொதுசெயலர் மாணிக்கராஜா முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர் இசக்கிமுத்து, புறநகர் மாவட்ட செயலர் ஆசீர், கொள்கை பரப்பு செயலர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமான் உள்ளிட்டோர் பேசினர்.