தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமன்றி, தரமான படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், அவரது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான திரைப்படம் ‘தாய் கிழவி’.
வெளியான முதல் நாளிலிருந்தே குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ள இப்படம், தற்போது வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
படம் வெளியாகி இன்றுடன் (மார்ச் 9, 2026) 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலக அளவில் இப்படம் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2026-ம் ஆண்டில் 50 கோடி கிளப்பில் இணைந்த இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘தாய் கிழவி’ பெற்றுள்ளது (முதலாவது படம் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’).

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், ராதிகாவின் அசாத்தியமான நடிப்பு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. முடங்கிப்போன தாயைக் காப்பாற்றத் துடிக்கும் மகன்களின் பாசப் போராட்டத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான பின்னணியில் இப்படம் பேசியுள்ளது.
இயக்குநர்கள் ஷங்கர், அட்லீ மற்றும் நடிகை ஜோதிகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இப்படத்தைப் பாராட்டியுள்ளது படத்தின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், தற்போது 5 மடங்கு வசூலை ஈட்டி தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தைத் தந்துள்ளது. வரும் நாட்களில் இப்படம் 75 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : tamil.indiaglitz.com
The post 10 நாட்களில் ரூ.50 கோடி வசூல் | ராதிகாவின் ‘தாய் கிழவி’ இமாலய சாதனை appeared first on Vanakkam London.