பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகள்… பஞ்சாப், ஆர்சிபி என இரு அணிகளுக்கும் அது 18 ஆண்டு கனவு.
ஜூன்-3-ஆம் தேதி புதிய சாம்பியன் யார் என அறிய நகம் கடித்து காத்திருந்தது பஞ்சாப் – ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்ல.
இந்த 18 ஆண்டுகளில் பஞ்சாபும், ஆர்சிபியும் இதுவரை மோதிய போட்டிகளில் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.
இன்னொரு புறம், கோப்பை கைகூடவில்லை என்றாலும் ஐபிஎல்லில் பதினெட்டாவது ஆண்டாக விளையாடிவந்தார் 18 எனும் எண் பொறித்த ஜெர்ஸி அணிந்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி.
எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. பஞ்சாபுக்கு எதிராக 19-வது வெற்றியை சுவைத்துவிட்டது ஆர்சிபி. அதன்மூலம் அதன் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒலிக்கும் ‘ஈ சாலா கப் நம் தே’ எனும் அதன் கனவு நனவாகியிருக்கிறது. வழக்கமாக எதிரணி பேட்ஸ்மேன் அவுட் ஆனாலே ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விராட் கோலி, இறுதி ஓவர்களில் மிகவும் பரபரப்பாக இருந்தார். ஆர்சிபி வெற்றி உறுதியான அந்த தருணம் அவரது கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. அதற்கு காரணம் இருக்கிறது.
பட மூலாதாரம், BCCI/IPL
2 வது சீசனிலேயே தகர்ந்த கனவு
ஐபிஎல் இரண்டாவது சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது பெங்களூரு. விராட் கோலி அப்போது அணியில் இருந்தார்.
அன்று பெங்களூருவின் கனவை இறுதி ஓவர்களில் தவிடுபொடியாக்கினார் ஆர்.பி.சிங். இந்த தொடரில் டெக்கான் சார்ஜஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
பட மூலாதாரம், BCCI/IPL
மீண்டும் நான்காவது சீசனில் இறுதிப்போட்டிக்கு வந்தது ஆர்சிபி. இம்முறை எதிரில் நின்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது ஆர்சிபி. வெட்டோரி தலைமையிலான ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் இருந்தனர். ஆனால் மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் முதலில் பேட்டிங் செய்யும்போதே நொறுக்கித்தள்ளினர். இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு கனவை தனது சுழலில் சுழற்றி எறிந்தார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
பட மூலாதாரம், BCCI/IPL
மிரட்டிய ஃபைவ் ஸ்டார் படை
மூன்றாவது முறையாக 2016-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு வந்தது ஆர்சிபி. இம்முறை கோலி கேப்டன். ஆர்சிபியின் பேட்டிங் படையை பேப்பரில் பார்த்தராலே சிலருக்கு கதி கலங்கக்கூடிய நிலை இருந்தது. கிறிஸ் கெயில், கோலி, டிவில்லியர்ஸ், கே.எல்.ராகுல், ஷேன் வாட்சன் என ஃபைவ் ஸ்டார் படையுடன் களமிறங்கியது. ஆனால் அன்றைய தினம் எதிரில் நின்றிருந்த ஹைதரபாத் அணி பென் கட்டிங்கை வைத்து ஆர்சிபி கனவை சின்னாபின்னமாக்கியது.
அதன்பிறகு ஆண்டுகள் உருண்டோடின, ஆர்சிபியின் நட்சத்திர வீரர்கள் வயதாக வயதாக ஒவ்வொருவராய் ஓய்வு பெற்றனர். ஃபிளே ஆஃப் வரை தகுதி பெற்றபோதும் கூட ஃபைனலில் நுழைய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது
பட மூலாதாரம், BCCI/IPL
டேபிள் டாப்-ல் இருந்த ஆர்சிபி
இதோ 9 ஆண்டுகள் கழித்து இம்முறை ஃபைனலுக்கு தகுதி பெற்றது ஆர்சிபி. இம்முறை கோலியை தவிர சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் யாரும் அணியில் இல்லை. ஆர்சிபி அணியை வழிநடத்தியதே இன்னும் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாத ரஜித் படிதார் தான். ஆனால் லீக் சுற்றில் வெறும் நான்கு போட்டிகளை மட்டும் இழந்து புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் நுழைந்தது ஆர்சிபி.
முதல் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலும், இரண்டாவது போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலும் வீழ்த்தியது ஆர்சிபி. சேப்பாக்கத்தில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு சிஎஸ்கேவை ஆர்சிபி வீழ்த்தியது அதுவே முதல் முறை.
இந்த இரு போட்டிகளிலேயே ஆர்சிபி ஒரு ஸ்டேட்மென்டை சொல்லிவிட்டது. அதன்பின்னர் மிகச்சிறிய சறுக்கல்கள் இருந்ததை தவிர வேறு எதுவும் தவறவில்லை.
பட மூலாதாரம், BCCI/IPL
வழக்கமாக அழுத்தம் நிறைந்த தருணங்களில் நம்பமுடியாத வகையில் சொதப்பித் தள்ளி மிகமோசமான தோல்விகளை சந்தித்த ஒரு அணி ஆர்சிபி. ஐபிஎல்லில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தபோதிலும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தது ஆர்சிபி அணி.
ஆனால், இம்முறை ஆர்சிபி ஆடிய விதம் அபாரம். லீக் சுற்றின் முடிவில் ஃபிளேஆஃபில் யாருக்கு எந்த இடம் என்பதை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான போட்டியில் லக்னௌவை எதிர்கொண்டது பெங்களூரு.
பிளே ஆஃபில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் ஆட வேண்டுமெனில் இதைச் செய்யுங்கள் என 228 ரன்கள் எனும் பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது லக்னௌ. அன்று கோலி, ஜிதேஷ் ஷர்மா ஆடியது சரவெடி ஆட்டம். எட்டு பந்துகள் மீதம் வைத்து இலக்கை கடந்து குவாலிபயர் 1-ல் என்ட்ரி கொடுத்தது ஆர்சிபி.
பட மூலாதாரம், Getty Images
ஃபிளே ஆஃப் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் அணியை வெறும் 14 ஓவர்களில் 101 ரன்களுக்கு அடக்கியது ஆர்சிபி. சேஸிங்கில் பத்தே ஓவரில் மேட்சை முடித்து டின்னருக்கு சென்றது ரஜத் படிதார் படை.
குவாலிஃபயர் இரண்டு போட்டியில் மிக வலுவான மும்பையை எதிர்கொண்டு ஷ்ரேயாஸ் அய்யரின் ஒரு அட்டகாசமான இன்னிங்ஸ் உதவியுடன் 204 ரன்கள் எனும் இலக்கை ஆறு பந்துகள் மீதம் வைத்து கடந்து மீண்டும் ஆர்சிபியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள தயாராயானது பஞ்சாப் அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்றது பஞ்சாப் அணி தான். இதுவரை மூன்றுமுறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் சேஸிங்கில் சொதப்பி கோப்பையை தவறவிட்டிருந்த ஆர்சிபி அணியிடம் முதலில் பேட் பிடிக்கச் சொன்னார் ஷ்ரேயாஸ் அய்யர்.
விராட் கோலியை ஷார்ட் பந்துகளில் சோதித்தனர் பஞ்சாப் பௌலர்கள். முதல் பத்து ஓவர்களில் ஒருமுனையில் விக்கெட் விழுந்தாலும் ரன்ரேட்டில் கவனமாக இருந்தது ஆர்சிபி. ஆனால், பத்தாவது ஓவருக்கு பிறகு மெல்ல ரன்ரேட் சரிந்தது. கோலி 35 பந்துகளில் 43 ரன்களைச் சேர்த்து அவுட் ஆனதும், ஜிதேஷ் ஷர்மா ஜேமிசன் ஓவரில் காட்டிய அதிரடியால் ஆர்சிபி ரன்ரேட் மீண்டும் பத்தை நெருங்கியது.
ஸ்கோர் 200-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் அட்டகாசமான 20-வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெறும் மூன்று ரன்கள் மட்டுமே அடித்தது ஆர்சிபி.
அந்த ஓவர் ஆர்சிபியின் கடந்த கால சொதப்பல்களை நினைவுபடுத்துவதாய் இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
சேஸிங்கில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி பிரியான்ஷ் ஆர்யா அமர்க்களமாய் ஆட்டத்தை தொடங்க, அதே ஓவரின் இறுதி பந்தை எதிர்கொண்ட பிரப்சிம்ரன் பந்தை சிக்சருக்கு அனுப்பி அட்டகாசமாய் தனது ஆட்டத்தை துவங்கினார். முதல் ஓவரிலேயே 13 ரன்கள் பஞ்சாபுக்கு கிடைத்தது.
உடனே சுதாரித்த ரஜித் படிதார் மூன்றாவது ஓவரை புவனேஷ்வர் குமாருக்கு தராமல், ஹேசில்வுட்டிடம் வழங்கினார். ஐந்து ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்தது. அதற்கடுத்த ஓவரை வீசிய புவனேஷ்வர் நான்கு ரன்கள் மட்டும் கொடுத்தார். மெல்ல அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அதற்கடுத்த ஓவரிலேயே ஃபில் சால்டின் ஒரு சிறப்பான கேட்சால் ஆட்டமிழந்தார் பிரியான்ஷ் ஆர்யா.
பவர்பிளே முடிந்ததும் க்ரூனால் பாண்டியாவை கொண்டுவந்தார் படித்தார். அவரது ஓவரில் திணறியது பஞ்சாப். பிரப்சிம்ரன் விக்கெட்டை க்ரூனால் தூக்க, ஷ்ரேயாஸ் அய்யர் வந்தவுடனேயே ரொமாரியோ ஷெப்பர்ட் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் ஷ்ரேயாஸ் விக்கெட்டை கொண்டாடித் தீர்த்தனர்.
பட மூலாதாரம், Getty Images
அதன்பின்னர் சேஸிங்கில் கோட்டைவிட்டது பஞ்சாப். இறுதி ஓவர்களில் தனி ஒருவனாய் ஷஷாங்க் சிங் போராடினார். குறிப்பாக ஹேசில்வுட் வீசிய கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 22 ரன்கள் குவித்தார்.
ஆனால் கோப்பையை கைப்பற்ற இன்னும் ஒரு பந்தையாவது முன்பே எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பியிருக்க வேண்டும் பஞ்சாப். அந்த ஒரு பந்தை தவறவிட்டதால், கோப்பை கனவை சுமந்து 19-வது ஆண்டுக்குள் நுழையவுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
ஒரே ஒரு நோபால் கூட ஆட்டத்தை மாற்றிவிடும் அபாயம் இருந்தபோதிலும், இம்முறை இறுதி ஓவர்களில் எந்தவித தேவையற்ற தவறுகளையும் செய்யாமல் சுதாரித்து செயல்பட்டு கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி.
18 ஆண்டுகால கனவு நனவானதும் இப்படிச் சொன்னார் விராட் கோலி. இன்று இரவு ஒரு குழந்தையை போல தூங்குவேன் என…
ஆனால், ஆர்சிபி ரசிகர்களுக்கு உற்சாகம் குறைய இன்னும் சில பல இரவுகள் ஆகக்கூடும். ஏனெனில் அவர்களின் காத்திருப்பு காலம் அத்தகையது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு