2024 ஆம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) ஆராய்ச்சிக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் கண்டுபிடிப்புகள் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையான திசுக்களால் ஆனது என்பதையும் விளக்க உதவுகிறது. மரபணுக்களில், மைக்ரோ RNA எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இவர்களின் ஆராய்ச்சி இருந்தது.
அவர்கள் இருவருக்கும் சேர்த்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா (£810,000) பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.
என்ன ஆராய்ச்சி?
மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள DNA-வில் நமது மரபணு சார்ந்த தகவல்கள் இருக்கின்றது.
எலும்பில் உள்ள உயிரணுக்கள், நரம்பில் உள்ள உயிரணுக்கள், தோலில் உள்ள உயிரணுக்கள், இதயத்தில் உள்ள உயிரணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் இந்த மரபணு தகவல்களை வெவ்வேறு சிறப்பு வழிகளில் பயன்படுத்துகின்றன.
அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி இது எவ்வாறு நடக்கிறது என்பதை விளக்க உதவுகிறது.
உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்கள் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
“இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறையின் முற்றிலும் புதிய முறையை வெளிப்படுத்தியது, இது மனிதர்கள் உட்பட பல உயிரணுக்களால் உருவான உயிரினங்களுக்கு இன்றியமையாததாக மாறியது”, என்று இந்த சபை கூறியது.
மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும், எனவே மைக்ரோ RNA உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
வழக்கத்திற்கு மாறான மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறைபுற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு கோளாறுகள் போன்ற உடலில் பிரச்னைகள் ஏற்படலாம்.
70 வயதான பேராசிரியர் அம்ப்ரோஸ் மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியிலும், 72 வயதான பேராசிரியர் ருவ்குன ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியிலும் பணிபுரிகின்றனர்.
முந்தைய நோபல் பரிசு வெற்றியாளர்கள்
2023 – கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (mRNA கோவிட் தடுப்பூசிகளுக்கு வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக)
2022 – ஸ்வாண்டே பாபோ (மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்காக)
2021 – டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் (நமது உடல் தொடுதல் உணர்வு மற்றும் வெப்பநிலையை எவ்வாறு உணர்கிறது என்பதற்கான ஆராய்ச்சிக்காக)
2020 – மைக்கேல் ஹூட்டன், ஹார்வி ஆல்டர் மற்றும் சார்லஸ் ரைஸ் (ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக)
2019 – சர் பீட்டர் ராட்க்ளிஃப், வில்லியம் கெய்லின் மற்றும் கிரெக் செமென்சா (செல்கள் ஆக்ஸிஜன் அளவை எவ்வாறு உணர்கின்றன மேலும் அதற்கேற்றபடி எவ்வாறு அவற்றை மாற்றிக்கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்காக)
2018 – ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் தசுகு ஹோன்ஜோ (உடலின் நோயெதிர்ப்பு சக்தி மூலம் புற்றுநோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)
2017- ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் (நமது உடல் எப்படி சிர்க்காடியன் ரிதம் அல்லது கடிகாரத்தை வைத்தது போல செயல்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)
2016 – யோஷினோரி ஓசுமி (கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் செல்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக)