0
2025ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து குடிவரவு வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தின் குடிவரவு விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பாராளுமன்ற விளக்கங்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் உயர்த்தப்படுகின்றன. Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போதைய B1 நிலைக்கு பதிலாக CEFR அடிப்படையில் B2 நிலை ஆங்கிலத் திறனை நிரூபிக்க வேண்டும். பணியிட தொடர்பாடலும் சமூக ஒருங்கிணைப்பும் மேம்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே இந்த விசாக்களில் உள்ளவர்கள், விசா நீட்டிப்பின் போது புதிய நிபந்தனையால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், 2026 பிப்ரவரி 25 முதல் Electronic Travel Authorisation (ETA) திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. விசா தேவையில்லாத சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இங்கிலாந்திற்கு வருவதற்கு முன் டிஜிட்டல் முன் அனுமதி பெற வேண்டும். £16 கட்டணத்தில் வழங்கப்படும் ETA இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும்; பலமுறை நுழைவிற்கு அனுமதி வழங்கும். விமான நிறுவனங்கள் பயணம் தொடங்குவதற்கு முன் இந்த அனுமதியைச் சரிபார்ப்பார்கள். பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடிமக்கள் இந்த விதியிலிருந்து விலக்கு பெறுகின்றனர்.
அதே நேரத்தில், நிரந்தர குடியிருப்பு (Indefinite Leave to Remain – ILR) தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்கள் குறித்து அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான குடியேற்றர்களுக்கான நிரந்தர குடியிருப்பு பெறும் காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாக நீட்டிப்பது, உயர்ந்த ஆங்கிலத் திறன் நிபந்தனைகள் விதிப்பது, நீண்டகால வருமானம் மற்றும் பொருளாதார பங்களிப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் போன்றவை இதில் அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்டால், 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; ஏற்கனவே நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு இது பின்நோக்கி பொருந்தாது.
2026 இற்கான புதிய சம்பள வரம்பு உயர்வுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்ந்த சம்பள வரம்புகள் தொடரும். குறிப்பாக Skilled Worker விசாவிற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பான £41,700 விதி தொடர்ந்தும் அமலில் இருக்கும். தற்காலிக shortage occupation சலுகைகள் 2026 முடிவு வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மூலம் நிகர குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பது, உயர்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது என்பதே அரசாங்கத்தின் நோக்கம். இதனால், குடியேற்றர்கள், வேலை வழங்குநர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் UK Home Office வெளியிடும் புதிய வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றி, ஆங்கிலத் தேர்வுகள், ETA விண்ணப்பங்கள் மற்றும் எதிர்கால குடியேற்றத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.