• Fri. Feb 7th, 2025

24×7 Live News

Apdin News

2026-ல் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்: நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | DMK will win and form the government in 2026: CM

Byadmin

Feb 7, 2025


திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சோலார் ஆலைகளை தொடங்கி வைத்தபின் திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய தமிழக முதல்வர் அங்கிருந்து வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் ரவுண்டானா, முருகன்குறிச்சி, திருச்செந்தூர் சாலை வழியாக பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வரையில் 3 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், சிறுபான்மையினர், திமுகவினர், தொழிற்சங்கததினர், நிறுவன பணியாளர்கள், கடை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கை கொடுத்த்து மகிழ்ந்தார்.

அப்போது ஏராளமானோர் கோரிக்கை மனுக்களையும் முதல்வரிடம் அளித்தனர். இதை தொடர்ந்து பாளையங்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இச்சந்தையில் ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், ரூ.14.92 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள், ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

மேலும் திருநெல்வேலி டவுண் பாரதியார் பள்ளிக்கு அருகில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், திருநெல்வேலி டவுண் நயினார்குளம் தெற்கு பகுதியை ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் என்று மொத்தம் ரூ.66.04 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பாளையங்கோட்டையிலுள்ள நேருஜி கலையரங்கில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், மத்திய மாவட்டம், மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். கட்சி நிர்வாகிகளின் ஆக்கபூர்வ செயல்பாடுகள், கட்சி சார்பில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் திமுக பொதுசெயலர் துரை முருகன், தலைமை கழக முதன்மை செயலர் கே.என். நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீடித்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க செய்தியாளர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முக்கியமாக சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகியதாக அறிவித்த திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர், பொதுசெயலர் வேல் ஆறுமுகம், அதிமுகவிலிருந்து இளங்காமணி உள்ளிட்டோரும் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த இணைப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “பாஜக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்திருப்போரை வரவேற்கிறேன். திமுகவுக்கு வலுசேர்க்கும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைந்துள்ளீர்கள். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றும். திமுகவை அண்ணா தொடங்கியபோதே இதை உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

எனவே நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை, எளிய மக்களுக்காக, தமிழினத்துக்காக பாடுபடுவோம். திமுக தொடங்கியபோது தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும் முதல்வராவோம் என்று தெரிவித்து வருகிறார்கள். இதெல்லாம் மக்களிடம் எடுபடாது. யார் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து மக்களுக்கு தெரியும்.

தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்து 1957-ல் தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறு படிப்படியாக வளர்ந்து 6-வது முறையாக ஆட்சியில் இருக்கிறோம். வரும் 2026-ல் 7-வது முறை வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். இதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதற்காக தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள். கட்சியில் இணைந்தவர்களும் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.



By admin