‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.’ என்ற குறள் வழியில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியின் குறைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுபவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். வியாழன் தவறாமல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டு நடப்பை அலசும் மருத்துவர் ராமதாஸ், ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக நேர்காணல் இது.
ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணியிலேயே பயணித்த பாமக-வுக்கு அண்மைத் தேர்தல்களில் அது கைகூடாமல் போனது ஏன்?
பாட்டாளி மக்கள் கட்சி இப்போதும் வலிமையாகத் தான் இருக்கிறது. இன்னும் கேட்டால், பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை அண்மைக் காலங்களில் அதிகரித்திருக்கிறது. அண்மையில் உழவர் பேரியக்கத்தின் மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்தினோம். வெறும் 25 நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த மாநாட்டில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். அடுத்து பிப்ரவரி 23-ம் தேதி கும்பகோணத்தில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டை சிறப்பாக நடத்தினோம்.
மே 11-ம் நாள் சித்திரை முழுநிலவு நாள் இளைஞர் பெருவிழா நடைபெறவுள்ளது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் முழுமையான வலிமை தெரியும். தேர்தல் முடிவுகளுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. 2026-ம் ஆண்டு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அது தான் உங்கள் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலாக இருக்கும்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அளித்தால் திமுக-வுக்கும் அது சாதகம் தானே… பிறகேன் திமுக அரசு இந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் இருக்க வேண்டும்?
நல்ல கேள்வி தான். இந்து தமிழ் திசை அலுவலகத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் தான் அறிவாலயம் அமைந்திருக்கிறது. அங்கு தான் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் அண்மையில் விழுப்புரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போதாவது நீங்கள் இதைக் கேட்டிருந்திருக்கலாம்.
பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பாமக அவ்வளவாக விரும்பாது என்பார்கள். விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
யாரும் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் புதிய கட்சி தொடங்கிய போது வாழ்த்துகளைத் தெரிவித்தோம். அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்களின் பணிகளைப் பொறுத்து தான் அவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள்.
பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பழனிசாமி அதை நிராகரிக்கிறாரே?
அது அதிமுக-வின் உள்கட்சி விவகாரம். அது குறித்து நான் கருத்து கூறுவது முறையல்ல.
இந்த விஷயத்தில் ஒரு மூத்த அரசியல்வாதியான நீங்கள் மத்தியஸ்தம் செய்து பார்க்கலாமே?
இந்தக் கேள்விக்கான எனது பதில் முந்தைய வினாவுக்கான பதிலிலேயே இருக்கிறது.
சீமானின் பெரியார் குறித்த விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது பாமக?
தந்தை பெரியார் எங்களின் கொள்கை வழிகாட்டி. அவரை யார் விமர்சித்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் பகுத்தறிவு வளரவும், சமூகநீதி செழிக்கவும் பாடுபட்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் கூட, ஏதாவது ஒரு வழியில் அவரால் பயனடைந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அவரோ, இன்பநிதி காலத்திலும் எனக்கோர் இடம் வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறாரே?
நாங்கள் கூறுவது எங்கள் நிலைப்பாடு. துரைமுருகன் கூறுவது அவரது நிலைப்பாடு.
மூத்த அமைச்சர்களுக்கு திமுக-வில் இப்போது மரியாதை இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
இந்த வினாவுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதிலளிக்க முடியும். நான் எதையும் கூற முடியாது.
வன்னியர்களுக்கு 10.5 உள் இடஒதுக்கீடு கொடுத்துவிட்டால் திமுக கூட்டணிக்கே வந்துவிடுகிறோம் என்கிறாரே அன்புமணி… அப்போது திமுக-வுக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லை என்றாகிவிடுமா?
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. அவர் கூறியதை அரைகுறையாக புரிந்து கொண்டு நீங்கள் வினா எழுப்புகிறீர்கள். தேர்தலின் போது மட்டும் தான் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பாமக பேசுவதாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் இதைக் குறிப்பிட்டு பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ், “தேர்தலின் போது மட்டும் தான் இட ஒதுக்கீடு குறித்து பாமக பேசுவதாக கூறுபவர்கள் முட்டாள்கள். எங்களுக்கு தேர்தல் முக்கியமல்ல, இட ஒதுக்கீடு தான் முக்கியம். வேண்டுமானால், வன்னியர்களுக்கு திமுக 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கட்டும். தேர்தலில் கூட போட்டியிடாமல் விலகிக் கொண்டு திமுக-வை ஆதரிக்கிறோம். அதேசமயம், திமுக இட ஒதுக்கீடு வழங்காவிட்டால், வீடு வீடாகச் சென்று வன்னியர்களுக்கு திமுக இழைத்த அநீதியை எடுத்துக் கூறி திமுக அணியை வீழ்த்துவோம்” என்று தான் கூறினார்.
2021-ம் ஆண்டு தேர்தலின் போது கூட, “எங்களுக்கு ஒரு தொகுதிகூட தேவையில்லை என்று வெற்றுத் தாளில் எழுதித் தருகிறோம்; அதை வைத்துக் கொண்டு எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குங்கள்” என்று தான் அதிமுக-விடம் கூறினோம். எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி கூறும் வகையில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை 23 ஆகக் குறைத்துக் கொண்டோம். தேர்தல் அரசியலை விட சமூகநீதி தான் எங்களுக்கு முக்கியம் என்பது தான் அதன் பொருள் ஆகும். எங்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திமுக மீது நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இப்போதும் அப்படியே உள்ளன. அதில் மாற்றம் இல்லை.
எல்லாக் கட்சிகளுக்குமே முதல்வர் கனவு இருக்கிறது. பாமக-வுக்கு அந்தக் கனவு கைகூட வாய்ப்பிருப்பதாக நம்புகிறீர்களா?
ஆம். அதிலென்ன சந்தேகம்?
சுதந்திர தினத்தின் போது ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டு அதற்கொரு நியாயமும் சொன்னார்கள். ஆனால், குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்து விட்டார்களே..?
இந்த விவகாரத்தில் திமுக செய்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். விடுதலை நாளின் போது ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாகவும், அரசு கலந்து கொள்வதாகவும் ஒரு விசித்திரமான காரணத்தைக் கூறினார்கள். திமுக-வுக்கும் ஆளுநருக்கும் எந்த மோதலும் இல்லை. திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் தான் மோதல்.
அவ்வாறு இருக்கும் போது மோதல் இருக்கும் அரசு, ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக அரசு பங்கேற்கும்; மோதல் இல்லாத திமுக-வும், கூட்டணி கட்சிகளும் பங்கேற்காது என்பது சரியானது அல்ல. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியதால் தான் குடியரசு நாளில் முதல்வரும் அமைச்சர்களும் தேநீர் விருந்தை புறக்கணித்து விட்டனர்.
ஆளுநர் – ஆளுங்கட்சி மோதலில் யார் பக்கம் நியாயமிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?
ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று; மாநில சுயாட்சிக்கு அது எதிரானது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், ஆளுநர் பதவி இருக்கும் வரை ஆளுநரும், அரசும் தண்டவாளத்தைப் போல இணையாக பயணிக்க வேண்டும், இல்லாவிட்டால் மக்கள் நலனும், அரசின் செயல்பாடுகளும் தான் பாதிக்கப்படும். இதை உணர்ந்து இரு தரப்பும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.