7
வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய கொள்கை சமிக்ஞைகளை வெளியிடத் தயாராக உள்ளது. குறிப்பாக 2026 முதல் 2030 வரையிலான புதிய ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்துக்கான வழிகாட்டி வரைபடம் இந்த அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா, வளர்ச்சியின் வேகத்தை மட்டும் அல்லாது அதன் தரத்தையும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2035ஆம் ஆண்டிற்குள் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட நவீனமயமான நாடாக மாறும் இலக்கை அடைவதற்கான முக்கிய கட்டமாக 15ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலப்பகுதி கருதப்படுகிறது.
சீனாவின் ஆட்சிமுறையில் ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டபோதிலும், நாடு தொடர்ந்து வளர்ச்சி இலக்குகளை அடைந்து சீன நவீனமயமாக்கல் பயணத்தில் நிலையான முன்னேற்றத்தை சாதித்துள்ளது.
வரவிருக்கும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் உயர்மட்ட அரசியல் ஆலோசனை அமைப்பின் கூட்டங்களில், உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் கொள்கைகள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன. உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது, அறிவியல்-தொழில்நுட்ப புதுமைகளை மேம்படுத்துவது, பொருளாதார சீர்திருத்தங்களை ஆழப்படுத்துவது மற்றும் உயர்தர திறந்த பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
சீன பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இறுதி நுகர்வு செலவினங்கள் 52 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து சதவீதம் அதிகமாகும்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் வருமானத்தை உயர்த்துதல், சேவை துறையின் நுகர்வை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனுடன், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் முதலீட்டு செலவினங்களை அதிகரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. உட்கட்டமைப்பு வளர்ச்சியுடனும் மனித வள முதலீட்டுடனும் இணைந்த இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வசந்தகால பண்டிகை நிகழ்ச்சியில் மனித வடிவ ரோபோக்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சி, தொழில்நுட்ப அடிப்படையிலான எதிர்காலத்துக்கான சீனாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதாக மதிப்பிடப்படுகிறது.
அறிவியல்-தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஆதரவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் உயர்தர வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தேசிய சந்தை அமைப்பை உருவாக்குதல், மூலதன சந்தை முதலீடு மற்றும் நிதியமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முக்கியமான 300க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்கு முன் கார்பன் டையாக்சைட் வெளியீட்டை உச்ச கட்டத்துக்கு கொண்டு வந்து பின்னர் குறைப்பதற்கான இலக்குடன், சீனா பசுமை ஆற்றல் மாற்றத்தையும் வேகப்படுத்த உள்ளது. சாமார்ட் மின்வலையமைப்பு, ஹைட்ரஜன் ஆற்றல் மற்றும் பசுமை எரிபொருள் தொழில்துறைகளை மேம்படுத்தும் முயற்சிகளும் இதில் அடங்கும்.
உலகளாவிய சவால்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி முன்னேற்றத்தை அடையும் கொள்கையை சீனா தொடர்ந்து பின்பற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026–2030 ஐந்தாண்டுத் திட்டத்தின் வழிகாட்டி ஆவணம் சீனாவின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசின் முன்னுரிமைகளை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.