1
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு அது இன்றுடன் (30) நிறைவடைகிறது.
எனவே ஜூன் 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பி.ப 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அன்றைய தினம் முதல் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே நாளொன்றை ஒதுக்கிக்கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் அல்லது முன்னுரிமை தேவையுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மேற்படி காலப்பிரிவிற்குள் தமது விண்ணப்பங்களை ஒருநாள் சேவையின் கீழ் ஒப்படைக்க முடியும்.
பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்கள் மு.ப. 7 மணி முதல் பி.ப. 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பிராந்திய அலுவலகங்களில் முன்னர் போன்றே காலை 7 மணி முதல் பி.ப. 2 மணி வரை சாதாரண சேவை மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.