0
தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை காலிங்க குமாரகே வென்றெடுத்தார்.
சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம் காலிஙக குமாரகே வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.55 செக்கன்களில் ஓடி முடித்து அவர் மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
அப் போட்டியை 45.33 செக்கன்களில் நிறைவுசெய்த கத்தார் வீரர் அமார் இஸ்மாயில் வை. இப்ராஹிம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஜப்பான் வீரர் கென்டாரோ சாட்டோ (45.50 செக்.) வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
பெண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய நடீஷா ராமநாயக்கவினால் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. அவர் பாதியிலேயேபோட்டியைக் கைவிட்டுவிட்டார். ஏனைய வீராங்கனைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய நடீஷா ராமநாயக்க அப் போட்டியை 54.70 செக்கன்களில் நிறைவுசெய்து கடைசி இடத்தைப் பெற்றார்.
அப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை மட்சுமோட்டோ (52.17 செக்.) தங்கப் பதக்கத்தையும் இந்திய வீராங்கனை ருபால் சௌதரி (52.68 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஹுக்மோவா (52.79 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீற்றர் அரை இறுதியில் 3ஆவது போட்டியை 10.46 செக்கன்களில் நிறைவுசெய்த சமோத் யோதசிங்க 3ஆம் இடத்தைப் பெற்றார். ஆனால், அவரால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போனது.
மூன்று தகுதிகாண் போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் சமோத் யோதசிங்க 10ஆம் இடத்தை பெற்றார்.