6
இங்கிலாந்தின் விர்ரல் (Wirral) பகுதியைச் சேர்ந்த மூன்று மாதங்களே ஆன சிசு மிகுவலுக்கு (Miguel) நேர்ந்த கொடூரமான கொலை வழக்கில், அவனது பெற்றோருக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் (Liverpool Crown Court) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2024 நவம்பர் மாதம் 24ஆம் திகதியன்று, சீகோம்ப் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து இச்சம்பவம் நடந்துள்ளது.
மூன்று மாதமே ஆன மிகுவல், மண்டை ஓடு முறிவு மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நவம்பர் மாதம் 29ஆம் திகதியன்று அவனது உயிர் பிரிந்தது.
மருத்துவப் பரிசோதனையில், அந்தக் குழந்தையின் விலா எலும்புகள், தோள்பட்டை, கை மற்றும் கால் ஆகியவற்றில் பல வாரங்களாகத் தொடர்ச்சியான காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவை அந்தப் பெற்றோரால் குழந்தை முறையாகத் துன்புறுத்தப்பட்டதைக் காட்டுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குழந்தை மூச்சு விடுவதை நிறுத்தியபோது, தந்தை கிளெவி பிர்ஜானி (Klevi Pirjani) அவசர உதவிக்காக 999 எண்ணைத் தொடர்பு கொண்டார். அந்த அழைப்பின் போது, அவர் தனது சொந்த மகனைக் குறிக்க ‘அவன்’ என்று சொல்லாமல், உயிரற்ற பொருள்களைக் குறிக்கும் ‘அது’ (It) என்ற சொல்லைப் பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குழந்தையின் மீதான அவரது மனப்பான்மையைக் காட்டுவதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
தந்தை கிளெவி பிர்ஜானி (வயது 37) குறைந்தது 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
தாய் நிவால்டி பிர்ஜானி (வயது 35) குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
விசாரணையின் போது, தாய் நிவால்டி தனது கணவர் தன்னிடம் வன்முறையாக நடந்துகொண்டதாகக் கூறினார்.
இருப்பினும், “நான் உன்னைப் பாதுகாத்திருக்க வேண்டும்” என்று அவர் தனது இறந்துபோன குழந்தையிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்காத்துக் கொள்ளத் தெரியாத ஒரு குழந்தைக்கு இழைக்கப்பட்ட இந்த வலி கற்பனை செய்ய முடியாதது என்று மெர்சிசைடு பொலிஸார் (Merseyside Police) தெரிவித்தனர்.
