• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு | அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது

Byadmin

Mar 29, 2026


இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது.

ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் அணுமின் நிலையம் குறித்து பேசப்பட்டதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வினாவிய போது, இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடும் எனத் தெரிவித்தார்.

எனினும், வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய அமைச்சர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வார்.

இருப்பினும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ள சூழலில், ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கைக்குப் பாரிய இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. முப்பது நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்தால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது சர்வதேச ரீதியில் இலங்கையைப் பாதிக்கலாம்.

இதற்கிடையில், அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் உறுதிப்படுத்தியது.

அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த சர்வதேச அணுசக்தி நிறுவனம், குறிப்பாக உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கி, 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. ஆனால் ரஷ;ய தரப்பு இத்திட்டம் குறித்து கோரிக்கையை முன்வைத்த போது தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin