பட மூலாதாரம், Getty Images
உலகின் மிகப்பெரிய கல்வி வாரியங்களில் ஒன்றான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது.
இந்த முறை 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணிதப் பாடத்துடன் தொடங்கியது.
இருப்பினும், இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் ஒருவருக்கு தனது தேர்வு முடிவில் திருப்தி ஏற்படவில்லை எனில், தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும், இருப்பினும் அதற்கு ஒரு சில நிபந்தனைகளும் உண்டு.
அதேபோல் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தத்திலும் இந்த முறை மாற்றம் செய்யப்படுகிறது. டிஜிட்டல் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மாணாக்கர்களுக்கு தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைத்து, மதிப்பீடு செய்வதை வெளிப்படையாகவும் வேகமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என இந்த மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த டிஜிட்டல் ஆன்-ஸ்கிரீன் மதிப்பெண் முறை எவ்வாறு செயல்படும்? 10-ஆம் வகுப்பு தேர்வை இரண்டு முறை எழுதுவதால் என்ன பயன்? இரு முறை தேர்வு எழுதும் வாய்ப்பு பெற தகுதி என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துக் கொள்வோம்.
சிபிஎஸ்இ தேர்வுகளில் என்ன மாற்றங்கள் இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
2026-ஆம் ஆண்டு தேர்வுகளை நடத்துவது மற்றும் டிஜிட்டல் மதிப்பீடு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழிக் கருத்தரங்கில், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் பேசுகையில், இந்த முறை பொதுத்தேர்வுகளில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
முதலாவதாக, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும். அதாவது, மாணாக்கர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மேம்படுத்திக்கொள்ள மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
இரண்டாவதாக, 12-ஆம் வகுப்புத் தேர்வில் ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து விடைத்தாள்களும் முதலில் ஸ்கேன் செய்யப்பட்டு, ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் அமைப்பில் பதிவேற்றப்படும்.
இந்த ஆன்-ஸ்கிரீன் மதிப்பீட்டு முறையின் நோக்கம், மதிப்பெண்களைக் கூட்டுவதில் ஏற்படும் பிழைகள், ஏதேனும் ஒரு கேள்வி திருத்தப்படாமல் விடுபட்டுப் போவதைத் தவிர்ப்பது என பொதுவாக நடக்கும் இரண்டு தவறுகளைக் குறைப்பதாகும்.
இந்த புதிய மாற்றங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், மதிப்பீட்டு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் ராகுல் சிங் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணாக்கர்களும் இரண்டாவது முறை தேர்வை எழுத முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் சன்யம் பரத்வாஜ் அவர்களின் கூற்றுப்படி, முதல் தேர்வில் பங்கேற்பது மாணாக்கர்கள் அனைவருக்கும் கட்டாயமாகும்.
இரண்டாம் முறை தேர்வு எழுதுவது என்பது தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்புபவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும். இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மாணாக்கர்களும் முதல் பொதுத்தேர்வில் கலந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்ற மற்றும் தகுதியுள்ள மாணாக்கர்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் என ஏதேனும் மூன்று பாடங்களில் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
முதல் தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கான தேர்வுகளில் பங்கேற்காத தேர்வர்கள் இரண்டாம் தேர்வை எழுத அனுமதிக்கப்படமாட்டார். இத்தகைய மாணாக்கர்கள் ‘கட்டாய மறுதேர்வு’ பிரிவில் வைக்கப்படுவார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் முதன்மைத் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.
முதல் தேர்வில் ‘கம்பார்ட்மென்ட்’ (ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள்) முடிவைப் பெறும் மாணவர்கள், அந்தப் பிரிவின் கீழ் இரண்டாம் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, கூடுதல் பாடங்கள் அல்லது தனிப்பட்ட பாடங்களை (Stand-alone subjects) எடுக்க அனுமதி கிடையாது.
10-ஆம் வகுப்பு இரண்டாம் பொதுத்தேர்வை எழுதுவது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
முனைவர் சன்யம் பரத்வாஜ் அவர்களின் கூற்றுப்படி, மார்ச் 10-ஆம் தேதி முதல் தேர்வு முடிந்தவுடன், மார்ச் 11 முதல் 12-ஆம் தேதிக்குள் எல்.ஓ.சி எனப்படும் தேர்வர்களுக்கான தளம் திறக்கப்படும்.
தனது முதல் தேர்வின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும், மதிப்பெண்கள் குறையக்கூடும் என்றும் ஒரு தேர்வர் கருதினால், இந்த எல்.ஓ.சி மூலம் தனது விவரங்களைப் பதிவு செய்யலாம்.
முதல் தேர்வு முடிந்து சுமார் 15 முதல் 20 நாட்களுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு எல்.ஓ.சி மீண்டும் திறக்கப்படும்.
தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தங்களது மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையில் எவ்வாறு திருத்தப்படும்?
பட மூலாதாரம், CBSE
முனைவர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், “இந்த ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளின் நோக்கம், ‘ஸ்மார்ட் தேர்வுகள், சிறந்த மதிப்பீடு: புதிய இந்தியாவின் அடையாளம்’ என்பதாகும்.”
அவரது கூற்றுப்படி, 2026-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கைகளில் பேனா இருந்தது, ஆனால் இனி ஆசிரியர்களின் கைகளில் ‘மவுஸ்’ எனப்படும் கணினி சுட்டி இருக்கும். இருப்பினும் 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள், வழக்கம் போல ஆசிரியர்கள் நேரில் திருத்தும் வழக்கமான நடைமுறையின்படியே திருத்தப்படும்.
சிபிஎஸ்இ அளித்த தகவலின்படி, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் பங்கேற்கின்றனர். 120 பாடங்களில் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளுக்கான விடைத்தாள்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறையின் கீழ், விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஆன்லைன் தளத்தில் பதிவேற்றப்படும், அங்கு ஆசிரியர்கள் கணினித் திரையைப் பார்த்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண் வழங்குவார்கள்.
டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் வீர் யாதவ் கூறுகையில், “இது டிஜிட்டல் யுகம், டிஜிட்டல் மதிப்பீடும் அதன் ஒரு பகுதியாகும். ஆனால், ஆசிரியர்களுக்குப் போதுமான கால அவகாசமும், பயிற்சியும் கிடைக்கும் வகையில் இதனை அடுத்த கல்வி ஆண்டிலிருந்து டிஜிட்டல் மதிப்பீட்டை அமல்படுத்தியிருக்கலாம் என தோன்றுகிறது. இதில் சில தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்தார்.
அடுத்த கல்வி ஆண்டுக்குள் மாணாக்கர்களும் டிஜிட்டல் தேர்வு மதிப்பீட்டு முறைக்கு மனதளவில் தயாராகியிருப்பார்கள் என்றும், தங்களின் கையெழுத்து மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்த அவர்களுக்குப் போதுமான நேரம் கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் நல சங்கத்தின் செயலாளர் வினோத் சர்மா பிபிசியிடம் பேசுகையில், “சிபிஎஸ்இ-யின் ஆன்லைன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையால் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆசிரியர்கள் நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் கண் வலி மற்றும் சோர்வு ஏற்படலாம், அதோடு தொழில்நுட்ப சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம்,” என்றார்.
மேலும், “மதிப்பீட்டில் ஏதேனும் தவறு நடந்துவிடுமோ என்று மாணவர்கள் அஞ்சுகிறார்கள். ஆசிரியர்களுக்குச் சரியான பயிற்சியும், சிறந்த தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட வேண்டும்” என வினோத் சர்மா தெரிவித்தார்.
அதே சமயம், இதற்கான பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும் என்றும், இதில் பங்கேற்க ஓசிஸ் ஐடி, பள்ளி குறியீடு மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் உள்நுழைவு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை சிபிஎஸ்இ கண்காணிக்கும். உண்மையான மதிப்பீட்டின் போது எந்தவொரு தொழில்நுட்ப சிக்கல்களையும் தவிர்க்க ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு