படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் 8 போட்டிகளில் 178 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அவரது ஸ்டிரைக் ரேட்டும் 121.09 தான் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்
ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் இந்த சீசனில் இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது. வான்கடேவில் கடந்த ஏப்ரல் 23-இல் நடந்த போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது சிஎஸ்கே. இந்நிலையில், இன்று (மே 2) சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.
இரண்டு அணிகளுக்குமே இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. புள்ளிப் பட்டியலில் இரண்டாம் பாதியில் இருக்கும் இரு அணிகளுக்கும் ஒவ்வொரு போட்டியுமே முக்கியம். முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணி இனி ஆடும் போட்டிகள் அனைத்திலுமே வெற்றி பெறுவது அவசியம்.
ஏனெனில், அவர்கள் 8 போட்டிகளில் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். மீதமிருக்கும் 6 ஆட்டங்களையும் வென்றால் மட்டுமே அவர்கள் 16 புள்ளிகள் பெற முடியும். 2022 சீசன் முதலே 16 புள்ளிகள் பெற்ற அணிகள் (2024 சீசனில் ஆர்சிபி தவிர்த்து) தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. அந்த வகையில் இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருக்கிறது.
ஃபார்மை வைத்துப் பார்க்கும்போது மும்பையை விட சிஎஸ்கே ஓரளவு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் ஆட்டத்தைத் தவிர்த்து கடந்த சில போட்டிகளில் அவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். அவர்களால் தொடர்ச்சியாக 200-க்கு அருகே ஸ்கோர் எடுக்க முடிகிறது. பந்துவீச்சும் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது. அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீச் சிங் என அனைவருமே நம்பிக்கை தரும் செயல்பாடுகள் கொடுத்திருக்கிறார்கள். ஜேமி ஓவர்டன் பேட்டிங், பௌலிங் என இரண்டு துறைகளிலும் அசத்துகிறார்.
அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பையும் புறக்கணித்துவிட முடியாது. முந்தைய போட்டியில் தான் அவர்கள் 240 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ஸ்கோர் எடுக்கும்போது அது நிச்சயம் அந்த அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு நம்பிக்கை கொடுக்கும்.
அந்த அணிக்கு பந்துவீச்சின் செயல்பாடு தான் பிரச்னையாக இருக்கிறது. ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு விக்கெட்டுகள் வராதது அந்தப் பின்னடைவுக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று. அவர் ஒரு மிகப் பெரிய சீசனுக்குப் பிறகு வருவதால் அவர் சோர்வடைந்திருப்பதை உணர முடிகிறது.
பும்ராவும் சரி, அர்ஷ்தீப் சிங்கும் சரி இந்தியாவுக்காக நிறைய போட்டிகள் விளையாடிவிட்டு ஒரு பெரிய சீசனுக்குப் பின் வரும்போது, அவர்கள் களைப்படைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருவரின் ஐபிஎல் செயல்பாடும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இருக்கிறது. மிகப் பெரிய சீசனுக்குப் பிறகு வந்து அதேமாதிரி பந்துவீசுவது எளிதல்ல. ஆனால், மும்பை அணியின் செயல்பாட்டில் பெரிய தாக்கம் ஏற்படுத்தப் போவது என்னவோ பும்ராவின் ஆட்டம்தான். அவர் விக்கெட் எடுத்தால் மும்பை அணி நன்றாக செயல்படும்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இந்த சீசன் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார் (கோப்புப் படம்)
கேப்டன்களின் செயல்பாடு முக்கியம் ஏன்?
இந்த சீசனின் புள்ளிப் பட்டியலைப் பார்த்தால் புரியும் ஒரு விஷயம், எந்த கேப்டன்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ அந்த அணிகள் மேலே இருக்கிறார்கள். இந்த சீசனில் சிறந்த கேப்டன்கள் என்றால் அது ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதார் இருவரும் தான். பேட்டர்களாகவும் அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. தனிப்பட்ட செயல்பாடு நன்றாக இருக்கும் போது அது கேப்டன்ஸியிலும் தாக்கம் ஏற்படுத்தும். நன்றாக செயல்படும் போது கேப்டன்கள் மீதான நெருக்கடி குறையும். அதனால் மனதில் தெளிவு ஏற்படும். அது நல்ல முடிவுகள் எடுக்க வழிவகுக்கும்.
அதனால் இந்தப் போட்டி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்குமே முக்கியம். இருவருக்கும் இந்த சீசன் இதுவரை அவ்வளவு சிறப்பாக இருந்துடவில்லை. இந்த சீசன், ருதுராஜ் கெய்க்வாட் 8 போட்டிகளில் 178 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். அவரது ஸ்டிரைக் ரேட்டும் 121.08 தான். ஹர்திக் பாண்டியாவோ 7 இன்னிங்ஸ்களில் 128 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். பந்துவீச்சில் 12.27 என்ற எகானமியில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். அதனால், இந்தப் போட்டியில் இரண்டு கேப்டன்களுமே தங்கள் செயல்பாட்டின் மூலம் தங்கள் அணிகளை வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர முயற்சிப்பார்கள். முயற்சிக்கவேண்டும்.
ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வருவதற்கான அறிகுறிகள் என் கண்களுக்குத் தெரிகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான அந்த இன்னிங்ஸ் மாற்றத்துக்கு நிச்சயம் வழிவகுக்கும். ஹர்திக் பாண்டியாவைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சன்ரைசர்ஸுக்கு எதிராக நன்றாக விளையாடினார். பந்துவீச்சிலும் அவர் நன்றாக விளையாடினார் என்றாலும், அவர் ஒருவகையான நெருக்கடியை உணர்வதைக் காண முடிந்தது. அவர் மீது கூடுதல் பொறுப்பும், அதனால் பாரமும் ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. அவர் அந்த நெருக்கடியை உணராமல் ஆடும் பட்சத்தில் அவரால் தன் முழு திறனையும் வெளிப்படுத்த முடியும். ஆனால், அதுவும் அணியின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இந்த சீசன், ஹர்திக் பாண்டியா 128 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். பந்துவீச்சிலோ, 12.27 என்ற எகானமியில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார் (கோப்புப் படம்)
சுழலுக்கு உகந்த ஆடுகளம் சிஎஸ்கே-வுக்கு சாதகம்
சேப்பாக்கம் ஆடுகளங்களைப் பொறுத்தவரை இந்த சீசன் பேட்டிங்குக்கு உகந்ததாகவே இருந்திருக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டி மாலை நேரத்தில் தொடங்கியது என்பதால் அது சற்று பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது. ஆனால், இந்த ஆட்டம் இரவில் நடப்பதுதான் என்பதால் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
என்னைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்துக்கு தேர்வு செய்யப்படும் ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு ஒத்தழைப்பதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். வான்கடேவில் இந்த இரண்டு அணிகளும் மோதியபோது சூப்பர் கிங்ஸ் ஸ்பின்னர்கள் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தார்கள்.
அகீல் ஹொசைன் பவர்பிளேவிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்தப் போட்டியிலும் அகீல் ஹொசைன், நூர் அஹமது என இரண்டு ஸ்பின்னர்களை சிஎஸ்கே பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால், சுழலுக்கு சற்று ஏற்ற ஆடுகளமாக இருந்தால், இந்தப் போட்டியிலும் மும்பை பேட்டர்களுக்கு சிஎஸ்கே ஸ்பின்னர்கள் சவால் கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான், டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே என சுழலை சிறப்பாக எதிர்கொள்ளும் பேட்டர்கள் சிஎஸ்கே அணியில் நிறைந்திருக்கிறார்கள். அதுவும் அந்த சிஎஸ்கே அணிக்கு சாதகமான அம்சமாக அமையக்கூடும்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, வான்கடேவில் நடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தார் அகீல் ஹொசைன் (கோப்புப் படம்)
இரு அணிகளிலும் என்ன மாற்றம் இருக்கலாம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை. நம்பர் 3 இடத்தில் மட்டும் சர்ஃபராஸ் கான் ஆடவேண்டும் என்பது என் கருத்து. உர்வில் பட்டேலுக்கு பதிலாக அவரை பிளேயிங் லெவனில் சேர்த்துவிட்டு, உர்விலை சப்ஸ்டிட்யூட் பட்டியலில் வைத்துக்கொள்ளலாம். சர்ஃபராஸ் இந்த சீசனில் ஓரளவு நல்ல செயல்பாட்டையே கொடுத்திருக்கிறார். முக்கியமாக முகேஷ் சவுத்ரியை இழந்துவிடக்கூடாது. அதில் கவனமாக இருப்பது நல்லது. ஒருவேளை தோனி ஃபிட்டாக இருந்தால், அவர் நேரடியாக அணிக்குள் வந்துவிடவேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவின் கம்பேக் குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ரோஹித் ஃபிட்டாக இருந்தால், அவர் ராபின் மின்ஸுக்குப் பதில் அணியில் இடம்பெறுவார். ரோஹித் – ரிக்கில்டன் ஓப்பனிங் இறங்க, வில் ஜேக்ஸ் நம்பர் 7-ல் ஆடலாம். அவர் உலகக் கோப்பையில் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆனால், ரோஹித் ஃபிட்டாக இருக்கிறாரா என்பது இங்கு மிகப் பெரிய கேள்வி.
பந்துவீச்சைப் பொறுத்தவரை டிரென்ட் போல்ட் விக்கெட்டுகள் வீழ்த்தத் தவறுகிறார். அவரால் முன்பு போல் பவர்பிளேவில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதனால் இந்தப் போட்டியில் அவர் இடம்பெறமாட்டார் என்று கருதுகிறேன்.
வில் ஜேக்ஸ் பவர்பிளேவில் நன்கு பந்துவீசுவார் என்றாலும், துபே தவிர்த்து சிஎஸ்கே அணியில் வலது கை பேட்டர்கள் நிறைந்திருப்பதால், அவரை பந்துவீச்சில் அந்த அணி அதிகம் பயன்படுத்துமா என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை மயாங்க் மார்க்கண்டே, ரகு ஷர்மா போன்ற லெக் ஸ்பின்னர்களைக் கொண்டுவர நினைக்கலாம். இல்லையெனில், சமீபத்தில் அணியில் இணைந்திருக்கும் கேஷவ் மஹராஜ் நல்ல தேர்வாக இருப்பார். அனுபவம் வாய்ந்த ஒரு இடது கை ஸ்பின்னரால் சேப்பாக்கத்தில் நன்கு செயல்பட முடியும். எனவே, அவர் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ‘இம்பேக்ட் வீரராக’ ஐந்தாவது ஓவரிலேயே களமிறக்கப்பட்டார் சர்ஃபராஸ் கான் (கோப்புப் படம்)
வேறு என்ன எதிர்பார்க்கலாம்?
இந்தப் போட்டியில் இவ்விரு அணிகளுமே முதலில் சேஸ் செய்யவே விரும்புவார்கள் என்று நான் கருதுகிறேன். மே மாதம் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், அதன் காரணமாக இரவு பனிப்பொழிவு அதிகரிக்கும். அதனால், இரண்டாவது பேட்டிங் செய்வதையே அணிகள் விரும்பும்.
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த போட்டியில் 240 ரன்கள் அடித்தும் அதை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது. அதனால், அவர்கள் சேஸ் செய்வதை விரும்பலாம். சிஎஸ்கே-வின் வெற்றிகள் முதலில் பேட்டிங் செய்யும்போது வந்தவை என்றாலும், அவர்களும் இந்தக் கட்டத்தில் சேஸ் செய்து பார்க்க நினைக்கலாம்.
(கட்டுரையாளர் பாபா அபராஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர். 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது கேரளா அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)