பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
2025 ஐபிஎல் டி20 சீசனில் தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணி குஜராத் டைட்டன்ஸ்.
சாய் சுதர்சன், சாய் கிஷார், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே தமிழக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் 4 பேரும் கிடைக்கின்ற வாய்ப்பில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, முத்திரை பதித்து வருகிறார்கள். அதிலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் சாய் சுதர்சனின் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மிரட்டல் ஜோடி
பட மூலாதாரம், Getty Images
இந்த சீசனில் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுடன் சேர்ந்து சாய் சுதர்சன் அமைக்கும் கூட்டணி பெரும்பாலான ஆட்டங்களில் பெரிய ஸ்கோருக்கும், வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்கூட இருவரின் பார்ட்னர்ஷிப்பும் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் கடக்க உதவியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
வெளியேறும் சன்ரைசர்ஸ்?
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.
ஆர்சிபி அணியை விட நிகர ரன்ரேட்டில் 0.867 வலுவாக இருப்பதால் குஜராத் அணி 2வது இடம் பிடித்தது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கணித ரீதியாக முடியாவிட்டாலும், நிதர்சனத்தில் அந்த அணி அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வென்றாலும் 14 புள்ளிகளைக் கடக்க முடியாது.
ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கவும்கூட இந்த 14 புள்ளிகள் போதாது என்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் சன்ரைசர்ஸ் அணி வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சிம்ம சொப்ன தொடக்க வீரர்கள்
குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது.
இதுவரை 10 இன்னிங்ஸ்களில் சாய் சுதர்சன், கில் ஜோடி 627 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளனர். இதில் 6 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்துள்ளனர். இருவரின் சராசரி 60.27 ரன்களாக உள்ளது.
இருவரின் பேட்டிங்கிலும் இருக்கும் ஆக்ரோஷம், ஆவேசம்தான் குஜராத் அணிக்கு பவர்ப்ளேயில் பெரிய ஸ்கோரைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்கூட 43 பந்துகளில் இருவரும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர், இதில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடங்கும்.
இருவரின் பேட்டிங்கிலும் பவர்ப்ளேயில் 6 புல்ஷாட்கள், 2 ப்ளிக் ஷாட்கள், 2 கவர் ட்ரைவ் ஷாட்கள், ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ், ஒரு ஸ்டீர், ஒரு கட்ஷாட் ஆகியவற்றின் மூலம்தான் பவுண்டரி, சிக்ஸர் கிடைத்தது. பவர்பளேயில் இருவரும் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தது இந்த சீசனில் 6வது அதிகபட்சமாகும்.
பட மூலாதாரம், Getty Images
இந்த சீசன் முழுவதும் கில், சுதர்சன் இருவரும் மிரட்டலான ஃபார்மில் இருப்பதால் எந்த பந்துவீச்சாளர் மோசமாக பந்துவீசினாலும் தண்டிக்கத் தவறுவதில்லை. நேற்றைய ஆட்டத்தில் ஷமியின் 3வது ஓவரில் இருவரும் சேர்ந்து 21 ரன்களை விளாசினர்.
ஐபிஎல் சீசனில் வேறு எந்த அணியிலும் இல்லாத வகையில் குஜராத் அணிக்கு தொடக்க ஜோடி அமைந்துள்ளது. இருவரின் ரன் வேட்கையும், ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்கிறது. அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நிதானமாக, பேட்டிங்கில் கட்டுப்பாட்டுடன், மோசமான பந்துகளை தேர்வு செய்து மட்டுமே ஷாட்களை அடித்து நங்கூரம் அமைக்கிறார்கள்.
இந்த ஆட்டத்தில் கூட சுதர்சன், கில் இருவரின் பேட்டிங்கிலும் 15 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன, ஷாட்களில் கன்ட்ரோல் சதவீதம் 94 ஆக இருக்கிறது. ஒரு பந்துக்கு குறைந்தபட்சம் 2 ரன்கள் சேர்க்கவேண்டும் என்ற சராசரியில் இருவரும் விளையாடுகிறார்கள்.
ஐபிஎல் சீசனில் குஜராத் அணி வெற்றிகரமாக மாறுவதற்கு சாய் சுதர்சன் , கில் கூட்டணி மட்டுமல்லாமல் மற்றொரு அதிரடி வீரர் ஜாஸ் பட்லரும் குறிப்பிடத்தகுந்தவர்.
கில், சுதர்சன் இருவரில் யாரேனும் ஒருவர் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் அணியை தூக்கி நிமர்த்துவதில் பட்லரின் பேட்டிங் முக்கியமானதாகும்
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பேட்டர்கள் வரிசையில் குஜராத் அணியின் டாப்-3 பேட்டர்கள் இடம் பெற்றுள்ளனர். சுதர்சன், கில், பட்லர் மூவருமே இடம் பெற்றள்ளது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
சச்சினை முந்திய சுதர்சன்
தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற பெருமையையும், ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். 10 போட்டிகளில் 5 அரைசதங்கள் உள்பட 504 ரன்கள் குவித்து 50 ரன்களுக்கும் மேல் சுதர்சன் சராசரியும், 154 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
சாய் சுதர்சன் பேட்டிங்கில் இருக்கும் நிலைத்தன்மையைப் பார்த்து ” மிஸ்டர் கன்சிஸ்டென்சி” என அழைக்கிறார்கள்.
சுதர்சன் நேற்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 54 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சுதர்சன் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 59 இன்னிங்ஸ்களில் தான் 2000 ரன்களை எட்டினார். சுதர்சன் விரைவாக 54 இன்னிங்ஸ்களிலேயே இந்த ரன்களை எட்டினார்.
மிகவிரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஷான் மார்ச் 53 இன்னிங்ஸ்களில் வைத்துள்ளார். சுதர்சன் 2வது இடத்தில் இருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
குஜராத்தின் 3 தூண்கள்
குஜராத் அணியின் பேட்டிங் வெற்றிக்கு டாப்-3 வரிசையில் இருக்கும் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகிய 3 பேரும் தான் காரணம். குஜராத் அணி 10 இன்னிங்ஸ்களில் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் பேட்டிங் செய்ய குறைவாகவே வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏனென்றால் இந்த 3 பேருமே பெரும்பாலான ஆட்டத்தை, ஓவர்களை ஆக்கமிரத்து ஆடுவதால் நடுவரிசை பேட்டர்களுக்கு களமிறங்க வாய்ப்புக் குறைவாக இருக்கிறது. இந்த 3 பேரும் சேர்ந்து சுதர்சன்(48),கில்(76),பட்லர்(64) என நேற்றைய ஆட்டத்தில் 188 ரன்கள் சேர்த்தனர். 218 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி கடைசி ஓவரில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
பட மூலாதாரம், Getty Images
சர்ச்சை ரன் அவுட்
இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் 76 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் விக்கெட் கீப்பர் கிளாசனால் ரன்அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.
ஆனால், இந்த ரன்அவுட் குறித்து 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, அதில் உறுதியற்ற தன்மை நிலவிய நிலையிலும் கில்லுக்கு அவுட் வழங்கினர். அதாவது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் பந்து ஸ்டெம்பில் படுவதற்கு முன்பாகவே கிளாசனின் க்ளோவ் ஸ்டெம்பில் பட்டது தெரிந்தது. அதேநேரம், பந்தும் ஸ்டெம்பில் பட்டது. இரு சம்பவங்களும் மைக்ரோ வினாடிகள் இடைவெளியில் நடந்ததால், 3வது நடுவர் அவுட் வழங்கினார்.
இதைப் பார்த்து அதிருப்தி அடைந்த சுப்மன் கில் பெவிலியனுக்கு கோபத்துடன் சென்றார். அங்கிருந்த நடுவர்களிடம் சுப்மன் கில் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.அது மட்டுமல்லாமல் பந்துவீச களமிறங்கும்போதும், கள நடுவர்களிடம் தன்னுடைய ரன்அவுட் குறித்து வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் விதிகளின்படி தவறாகும், இதனால் நடுவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் சுப்மன் கில்லுக்கு தண்டனை விதிக்கப்படலாம்.
நம்பிக்கையிழந்த சன்ரைசர்ஸ்
பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் கடந்த சீசன்போல் நம்பிக்கையானதாக அமையவில்லை. குறிப்பாக தொடக்க ஜோடி ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இந்த சீசனில் பெரிய அளவுக்கு வெற்றிகரமான ஜோடியாக இல்லாதது அந்த அணியின் பெரும்பாலான தோல்விகளுக்கு காரணமாகும்.
இருவரில் ஒருவர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழப்பது, யாரேனும் ஒருவர் மட்டுமே நிலைத்து ஆடுவது சாதகமாக அமையவில்லை.
அதிலும் இந்த சீசனில் அபிஷேக் ஷர்மா 314 ரன்களும், டிராவிஸ் ஹெட் 281 ரன்களும் மட்டுமே சேர்த்துள்ளனர். ஹெட் இதுவரை 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார், அபிஷேக் ஒரு சதம், ஒருஅரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
இந்த ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அபிஷேக் களத்தி்ல் இருந்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை இருந்தது. இவர் ஆட்டமிழந்தபின் படிப்படியாக அந்த நம்பிக்கை குறைந்தது. கிளாசன் 23, அனிகேத் வர்மா(3) , கமிந்து மெண்டிஸ்(0) என ஆட்டமிழந்தனர்.
பிரசித் கிருஷ்ணா கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப்பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் ” கறுப்பு மண் ஆடுகளத்தில் சிக்ஸர் அடிப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஆடியவிதம் சிறப்பாக இருந்தது, ஸ்கோரை உயர்வாக கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கம்தான் இருந்தது. எங்களால் முடிந்தவரை சிறப்பான ரன்களை அடிக்கவே முயல்கிறோம். எங்கள் அணியின் பீல்டிங் இந்த சீசனில் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று நன்றாக இருந்தது. பிரசித், இசாந்த், கோட்ஸி ஆகியோர் ஸ்கோரை டிபெண்ட் செய்ய சரியாகப் பந்துவீசினர்.களத்தில் வீரர்கள் அனைவரும் 110% பங்களிப்பை வழங்கினர்” எனத் தெரிவித்தார்.
இன்றைய ஆட்டம்
சிஎஸ்கே vs ஆர்சிபி
இடம்: பெங்களூரு
நேரம்: இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
நாள் – மே 6
இடம் – மும்பை
நேரம்- இரவு 7.30 மணி
சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்
கொல்கத்தா vs சிஎஸ்கே
நாள் – மே 7
இடம் – கொல்கத்தா
நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs லக்னெள
நாள் – மே 9
இடம் – லக்னெள
நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்)
சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)
ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 470 ரன்கள்(10 போட்டிகள்)
நீலத் தொப்பி
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)
ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)
டிரன்ட் போல்ட் (மும்பை) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.