வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. கோலி, ரோகித் இல்லாத இந்தியாவின் இளம் படை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச ரன்னை பதிவு செய்து, அசாத்திய வெற்றியை வசப்படுத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்ஸனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 297 ரன்களைக் குவித்தது. ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு சாம்ஸன் விருந்து படைத்தார். கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.
சூர்யகுமார் முழு நேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாடிய இரு தொடர்களையும் அசத்தலாக வென்று கொடுத்திருக்கிறார்.
இந்தியா டாஸ் வென்று பேட்டிங்
ஐதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்காக சஞ்சு சாம்ஸனும், அபிஷேக் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி விளாசிய நிலையில் ஹசன் சகிப் பந்துவீச்சில் புல் ஷாட் ஆட முற்பட்டு, மிட் விக்கெட் திசையில் மெகதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் சஞ்சு சாம்ஸனுடன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்கதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இருவரது பேட்டில் இருந்தும் சிக்ஸர், பவுண்டரிகளாக ரன் குவிந்த வண்ணம் இருந்தது. இதனால் இந்திய அணி பவர் பிளே முடிவில் அதாவது 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களைக் குவித்தது.
பவர் பிளே முடிந்த பிறகும் இருவரும் அதிரடியைத் தொடர்ந்தனர். இதனால், இந்திய அணி 7.1 ஓவரில் அதாவது வெறும் 43 பந்துகளில் சதத்தைக் கடந்தது.
ஒரே ஓவரில் 5 சிக்ஸர் விளாசிய சாம்ஸன்
சாம்ஸன் – சூர்யகுமார் அதிரடியால் இந்திய அணி 9 ஓவர்களில் 122 ரன்களைக் குவித்திருந்தது. பத்தாவது ஓவரை வீச வங்கதேசத்தின் லெக் ஸ்பின்னர் ரிஷத் ஹொசைன் வந்தார்.
ஹொசைன் நல்ல லென்த்தில் முதல் பந்தை வீச, அது சாம்ஸனின் பேட்டில் படாமல் அவரது கால் காப்பில் பட்டது.
இரண்டாவது பந்தை ஃபுல் லென்த்தில் வீச, சாம்ஸன் லாவகமாக பின்னால் நகர்ந்து சிக்ஸர் விளாசினார்.
அடுத்த பந்திலும் ஹொசைன் தனது லென்த்தை தவறவிட, இம்முறை எந்த சிரமமுமின்றி லாங்-ஆஃப் திசையில் அபாரமாக சிக்ஸர் அடித்தார் சாம்ஸன்.
நான்காவது பந்து சற்று உயரம் குறைவாக வர, அதையும் சாம்ஸன் அபாரமாக தூக்கியடித்து சிக்ஸராக மாற்றினார்.
ஹாட்ரிக் சிக்ஸரகளை கொடுத்துவிட்டதால் ரிஷத் ஹொசைன் அடுத்த பந்தை சற்று மெதுவாக வீச, அதனை லாங் ஆன் திசையில் சாம்ஸன் சிக்ஸராக மாற்றினார்.
இதனைத் தொடர்ந்து ரிஷத் ஹொசைன் வீசிய கடைசி பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பிய சாம்ஸன் 90 ரன்களைக் கடந்து சதத்தை நெருங்கினார். இந்த ஓவரில் மட்டும் சாம்ஸன் 30 ரன்களை விளாசினார்.
சாம்ஸன் 40 பந்துகளில் சதம்
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்ஸன் 40 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு சதம் விளாசினார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்குப் பிறகு (இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் சதம்) அதிவேகமாக சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை சாம்ஸன் பெற்றார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே 111 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 11 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
சூர்யகுமார், ரியன் பராக், ஹர்திக் அபாரம்
சாம்ஸன் ஆட்டமிழந்த பிறகும் இந்திய அணியின் அதிரடி தொடர்ந்தது. மிஸ்டர் 360 டிகிரி என்ற பெயரெடுத்த கேப்டன் சூர்யகுமார் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்து, மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஒரு ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய இளம் வீரர் ரியன் பராக் இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாயண்டியாவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். ரியன் பராக் 13 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் குவித்தார்.
மறுபுறம், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன் சேர்க்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்களைக் குவித்தது. வங்கதேச அணியில் பந்துவீசிய அனைத்து வீரர்களுமே ஓவருக்கு சராசரியாக 11 ரன்னுக்கு மேல் கொடுத்திருந்தனர்.
வங்கதேசத்திற்கு தொடக்கமே அதிர்ச்சி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த அணியும் எட்டியிராத இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் பர்வேஸ் ஹொசைன் இந்திய அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். பேட்டில் பட்டு ஸ்லிப்பான பந்தை, முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரியன் பராக் கேட்ச் செய்தார்.
ஹர்திக் பாண்டியா வீசிய இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தை தன்ஜித் ஹாசன் பவுண்டரிக்கு விளாசினார். ஐந்தாவது பந்தில் ஹாசன் கொடுத்த கேட்ச்சை வாஷிங்டன் சுந்தர் தவறவிட, பந்து பவுண்டரியைக் கடந்தது.
தன்ஜித் ஹாசனுக்கு கேட்ச்சை தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர், அவரது விக்கெட்டை வீழ்த்தி தனது தவறுக்கு பிரயாச்சித்தம் தேடிக் கொண்டார். நான்காவது ஓவரை வீச வந்த வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ஹாசனை வீழ்த்தினார்.
வங்கதேச அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்திருந்ததால் இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடியோ, பதற்றமோ இன்றி துல்லியமாக பந்துவீசினார்கள். இதனால், வங்கதேச அணியினரால் எளிதாக ரன் குவிக்க முடியவில்லை.
இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்ற நிலையில், வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் தௌஹித் ஹிரிதாய் ஆகிய இருவரும் சற்று ஆறுதல் அளித்தனர். இருவரது பொறுப்பான, அதேநேரத்தில் சற்று அதிரடியான ஆட்டத்தால் வங்கதேச அணி சற்றே கவுரவமான ஸ்கோரை எட்டியது.
லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹிரிதாய் 42 பந்துகளில் 63 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். வங்கதேச அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3, மயங்க் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முத்திரை பதித்த சூர்யகுமார்
இந்த வெற்றியின் மூலம் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார், இலங்கைக்கு எதிரான முதல் தொடரிலேயே தோனி போன்ற புதுமையான முடிவுகளால் கவனம் ஈர்த்திருந்தார். தற்போது, கோலி, ரோகித் போன்ற சீனியர் வீரர்கள் யாருமின்றி வங்கதேசத்திற்கு எதிரான தொடரை அபாரமாக வென்று கேப்டனாக அழுத்தமாக முத்திரை பதித்துள்ளார்.